அம்பாறை மாவட்டத்திலுள்ள சிங்களப் பகுதிகளான பொலனறுவை, சேருவா, மினிப்பே, மஹியங்கனை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஒரு மாகாணத்தை உருவாக்குதன் மூலம், கிழக்கு மாகாணத்தை தமிழ், முஸ்லிம் மக்களுக்கான மாகாணமாக மாற்றி வடக்கையும் கிழக்கையும் இணைந்த அலகை உருவாக்க முடியும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார்.
இலங்கை அரசியலமைப்பில் மறுசீரமைப்பு தொடர்பில் பொதுமக்களுடைய கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் குழுவின் அமர்வு இரண்டாவது நாளாக, நேற்று செவ்வாய்க்கிழமை (16) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இதில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,
இணைப்பாகவுள்ள மாவட்டங்களை பிரித்து தனிமாவட்டங்களாக மாற்ற வேண்டும். ஏனெனில் அமைச்சரவை முறையில் செய்ய வேண்டியவற்றை அரசியல் யாப்புக்கு கொண்டு செல்கின்றனர். கொழும்பு, ஜெயவர்த்தனபுரம் ஆகியவற்றை இணைத்து தலைநகரம் உருவாக்கப்பட வேண்டும்.
இலங்கையைச் சேர்ந்து வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று வசிப்போர் மற்றும் அவர்களது சந்ததியினர் விரும்பும் நேரத்தில் இங்கு வந்து வாழ்வதற்கு ஏற்றவகையில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும்.
தற்போதுள்ள இரட்டைப் பிரஜாவுரிமை முறையானது பல நிபந்தனைகள் கொண்டமைந்துள்ளது. ஆகவே இதற்கென தனியான முறையொன்றை ஏற்படுத்த வேண்டும்.
இலங்கை, பல இனம், மொழி கலாச்சாரம் கொண்ட மக்கள் வாழ்கின்ற நாடாக பதியப்பட வேண்டும்.
மனித உரிமைகள் தொடர்பாக தெளிவான கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், நிலவுடமை ஆகியன அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் வழியேற்படுத்தப்பட வேண்டும் என்றார்.
‘நாடாளுமன்ற கீழ்ச் சபைக்குத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களில் 50 சதவீதமானவர்கள் தொகுதி வாரியாகவும் 50 சதவீதமானவர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவேண்டும்.
ஜனாதிபதி, ஆளுநர் ஆகியோர் அடையாளங்களாக இருப்பதுடன், பிரதமர் மற்றும் மாகாணங்களின் முதலமைச்சர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.
இலங்கை முழுவதிலும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் அமுல்படுத்தப்பட வேண்டும். சிங்கள பிரதேசங்களிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். ஆகையால், அனைத்துப் பிரதேசங்களிலும் இரண்டு மொழிகளும் இருக்க வேண்டும்.
ஐக்கிய இலங்கைக்குள் ஓர் அலகுக்குள் மாத்திரம் இனப்பிரச்சினை தீர்க்க முடியாது. முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்’ எனவும் அவர் தெரிவித்தார்.