Ad Widget

பிரித்தானியா வருமாறு சீ.வி.க்கு அழைப்பு

vickneswaranஇலங்கையின் நிலைமைகள் பற்றி பேசுவதற்காக பிரித்தானியாவிற்கு வருமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோனிற்கும் வட மாகாண முதலமைச்சரிற்கும் இடையிலான சந்தித்திப்பின் போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பிற்கு முன்னரே இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், முதலமைச்சரை புதுடில்லி வருமாறு அழைத்திருந்தார். எனினும் இந்த விஜயங்களில் எதுவும் உடனடியாக நடைபெறாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கை யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாக கூறப்படும் யுத்த குற்றங்களை விசாரிக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையூடாக சர்வதேச விசாரணை ஒன்றுக்கு ஆதரவு தேடப்போவதாகவும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் கூறியிருந்தார்.

அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வின்போது இலங்கை பற்றி பேசப்படும். இதன்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரான நவநீதம் பிள்ளை இலங்கை நிலைவரம் பற்றி தனது அறிக்கையை சமர்ப்பிப்பார்.

இதேவேளை, வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிரி மற்றும் மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ஆகியோரை இடமாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் குறிப்பிட்டன. இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

ஆளுநரை மாற்றும்படி வட மாகாண சபை ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts