Ad Widget

பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டதாக 23 பேர் கைது!! மேலும் 55 பேரை கைது செய்ய நடவடிக்கை!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளெ பிரபாகரனுக்கு முகநூலில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக நான்கு பேரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66ஆவது பிறந்தநாள் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. அவரை வாழ்த்தியும் அவரது பெருமைகளைக் குறிப்பிட்டு பலரும் முகநூலில் பதிவிட்டுள்ளனர்.

அவ்வாறு வாழ்த்துத் தெரிவித்தவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல்கள், சின்னங்கள் மற்றும் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படத்தை பதிவிட்ட குற்றச்சாட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பலரை பொலிஸார் கைது செய்து வருகின்றனர்.

நேற்றையதினம் மாலைவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏறாவூர் பொலிஸாரின் நடவடிக்கையில் அந்தக் குற்றச்சாட்டின் கீழ் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 55 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை தேடி வருவதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்படுவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட இளைஞர்களில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் தீவிர ஆதரவாளர்களும் உள்ளடங்குவதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

Related Posts