Ad Widget

பிரதேச சபை பெண் உயரதிகாரிக்கு மிரட்டல் கடிதம் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் பணியாற்றும் பெண் உயரதிகாரி ஒருவருக்கு மிரட்டல் விடுத்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வலிதெற்கு பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட இணுவில் பகுதியில் பிரதேச சபையின் அனுமதி எதுவும் பெறாமல் கட்டடம் ஒன்று கட்டப்பட்டுவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த கட்டிடத்திற்கு உரிய அனுமதியை பெறுமாறு பிரதேச சபையின் உபஅலுவலகத்தில் பணியாற்றும் பெண்பொறுப்பதிகாரி கட்டிட உரிமையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இரண்டு மூன்று தடவைகள் அறிவுறுத்தல் வழங்கியும் இன்று வரை கட்டிடத்திற்கான உரிய அனுமதி பெறப்படவில்லை.

இந்நிலையில் வலிகாமம் தெற்குபிரதேசசபையின் உபஅலுவலக பொறுப்பதிகாரி குறித்த கட்டிடத்தை அப்புறப்படுத்த அனுமதியைச் சபையிடம் கோரியுள்ளார். குறித்த கோரிக்கைக்கு அமைவாக தவிசாளர் பிரதேச சபையின் உரிய அனுமதிகள் எவையும் பெறப்படாமல் அமைக்கப்பட்டுள்ளதால் குறித்த கட்டிடத்தை அப்புறப்படுத்துமாறு தவிசாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையிலேயே வலிகாமம் தெற்குபிரதேசசபைக்கு நேற்று எச்சரிக்கை கடிதம் ஒன்று சென்றது குறித்த கடிதத்தில் உடுவில் பகுதியில் அமைந்துள்ள உபஅலுவலகத்தின் பொறுப்பதிகாரிக்கு எச்சரிக்கை விடும்வகையில் குறித்த கடிதம் அமைந்துள்ளது.

அதில்”அதிகாரியான நீங்கள் தேவையில்லாத விடயங்களில் தலையிடவேண்டாம் அவ்வாறு தலையிட்டால் முன்னர் இருந்த பொறுப்பதிகாரிக்கு நடந்ததே உங்களுக்கும் நடக்கும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்பொறுப்பதிகாரி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு பதிவுசெய்துள்ளார். இந்தச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இதேவேளைச் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டு வந்த கட்டிடத்திற்கு எதிராக பொறுப்பான அதிகாரி நடவடிக்கை எடுக்க முற்படும் போது இவ்வாறான மிரட்டல்கள் வருவதால் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

Related Posts