Ad Widget

பிரதமரின் பயணம் அரசியல் ரீதியானதால் கலந்துகொள்ளவில்லை – முதலமைச்சர் சி.வி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வடக்குக்கான பயணம் அரசியல் ரீதியானது. எனவே, மக்களின் பிரதிநிதி என்ற முறையில் அவரது கூட்டங்களில் தான் கலந்துகொள்ளவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் வியாழக்கிழமை (02) தெரிவித்துள்ளார்.

cv-vickneswaran-cm

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை விடுதித் தொகுதி மற்றும் இரத்த வங்கி திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது.

முல்லைத்தீவில் இருந்து அமைச்சர் ஒருவர் தெரியப்படவில்லையே என்ற குறை எப்பொழுதும் முல்லைத்தீவு மக்களால் முன்வைக்கப்பட்டு வருவது எனக்குத் தெரியாததல்ல. அன்ரனி ஜெயநாதனுக்கு வடமாகாணசபை 2 பிரதித்தலைவர் பதவியை மட்டுமே எமக்குக் கொடுக்க முடிந்தது. அதுவும் அப்பதவி வெறும் சம்பிரதாயபூர்வமான ஒரு பதவியே அல்லாமல் வலுவுடைய அதிகாரங்களைக் கொண்ட பதவி அல்ல. சீ.வீ.கே.சிவஞானத்துக்கு சுகயீனம் ஏற்பட்டால் தான் அன்டனி ஜெயநாதன் தமது பதவியை வகிக்க முடியும்.

எனவே தான், நாங்கள் முடியுமான வரையில் முல்லைதீவு மாவட்ட மக்களின் நலனை எமது முந்துரிமை கொடுக்க வேண்டிய ஒரு விடயமாக நினைத்து எமது கடமைகளை ஆற்றி வருகின்றோம். எம்மால் பணம் செலவழித்துக் கட்ட முடியாவிட்டாலும் Amer,cares நிறுவனம் தமது செலவில் கட்டித்தந்துள்ள இந்த சத்திரசிகிச்சைத் தொகுதி, இரத்த வங்கி ஆகியவற்றைத் திறந்து வைத்தாவது எமது மகிழ்வையும் கரிசனையையும் உங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளோம்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையானது யுத்தத்தின் பின்னர் 2011ஆம் ஆண்டில் இருந்து வெளிநோயாளர் மற்றும் உள்நோயாளர் பிரிவு என்பனவற்றுடன் பல விசேட மருத்துவ அலகுகளுடன் 24 மணி நேரமும் இம் மாவட்ட மக்களுக்கான சேவையினை வழங்கி வந்துள்ளது.

எமக்குப் பல வழிகளில் உதவிகளைப் பெற்றுத்தரும் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனத்துக்கு 2012ஆம் ஆண்டளவில் இந்த வைத்தியசாலையில் தேவைப்பட்டிருந்த உட்கட்டுமான அபிவிருத்திகள் பற்றி திட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில்த்தான் வைத்திய நிபுணர்களுக்கான விடுதித்தொகுதியொன்று 25 மில்லியன் ரூபாய் செலவிலும், வைத்தியர்களுக்கான விடுதித் தொகுதி 20 மில்லியன் ரூபாய் செலவீனத்திலும் அமைக்கப்பட்டு 2013ஆம் ஆண்டு நடுப்பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

இன்று 85 மில்லியன் ரூபாய் செலவில் Amer,cares நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள இந்த சத்திரசிகிச்சை விடுதித் தொகுதியானது திறந்து வைக்கப்பட்டு முல்லைத்தீவு வாழ் மக்களிடம் கையளிக்கப்படுகிறது. இங்கு 48 கட்டில்கள் கொண்ட சத்திர சிகிச்சைக்கூடம், சத்திர சிகிச்சைக்கான அதிதீவிர சிகிச்சைப்பிரிவு மத்திய சத்திர சிகிச்சை சுத்திகரிப்புப்பிரிவு ஆகியன கட்டித்தரப்பட்டுள்ளன.

இதனால் முல்லைத்தீவு வாழ் மக்கள் இதுவரை காலமும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விசேட சிகிச்சைகளுக்காகப் பயணிக்க வேண்டி இருந்த சிரமத்தை பாரிய அளவில் இன்றைய புதிய தொகுதிகள் குறைத்துள்ளன என்று கருதலாம்.

மேலும் இவ்வைத்தியசாலைக்குரிய இரத்த வங்கியானது 2010ஆம் ஆண்டு தொடக்கம் குறைந்தளவு வசதியுடன் இயங்கி வந்தது. 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் 2,200 குருதிக் கொடையாளிகள் இந்த இரத்த வங்கிக்கு குருதியை வழங்கியுள்ளனர். அத்துடன் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு நோயாளர்களை இடமாற்ற வேண்டி இருந்தது.

ஆனாலும் இச்சேவையினை விருத்தி செய்யும் பொருட்டு கொழும்பு சுகாதார அமைச்சின் இரத்த வங்கி நடவடிக்கை மூலம் இன் நிதியுதவியினூடாக மாவட்ட வைத்தியசாலை முல்லைத்தீவுக்கு 80 மில்லியன் ரூபாய் செலவில் புதிய இரத்த வங்கியும் அதற்குரிய மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டுளன. இதனூடாக மக்களிற்குச் சிறந்ததொரு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதுடன் மேலும் அதிகளவிலான குருதியினைச் சேகரிக்கக் கூடியதாகவும் இருக்கும்.
இவையாவும் எமது மக்களுக்குக் கிடைக்கப்பெற்றிருக்கும் வரப்பிரசாதங்கள். இன்று எமது புதிய சுகாதார அமைச்சர் முன்னிலையில் இவை திறக்கப்பட்டமை சாலப்பொருந்தும்.

முன்னைய அரசாங்கத்திற்கு ஒரு சத்திர சிகிச்சை அளிக்க எமது ஜனாதிபதிக்கு உறுதுணையாக நிற்கின்றவர் அமைச்சர் வைத்திய கலாநிதி இராஜித சேனாரத்ன. அவர் முன்னைய அரசாங்கத்தின் நோயுற்ற பகுதிகளை வெட்டி சத்திர சிகிச்சை செய்து புதியதொரு அரசாங்கத்தை எமக்குத் தரப்படாத பாடுபட்டுள்ளார். அவருக்கு எமது நன்றிகள் உரித்தாகுக.

இருப்பினும் அவரின் புதிய அரசாங்கத்தின் பிரதமருடன் எனக்கேன் வீண் விவாதம் என்று அவரும் நினைக்கக்கூடும். வரமுன் காப்பவனே புத்திசாலி. வருவதை அறிந்து நாங்கள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அது எம்மையே வருத்தும். என்னைப் பொறுத்தவரையில் இன்றே திரும்பவும் வீடு சென்று எனது ஓய்வினை மீண்டும் ஏற்றுவாழும் மனோநிலையில்த்தான் நான் இருக்கின்றேன். எதுவும் தேவையில்லை. ஆனால் பொறுப்புக்கள் தரப்பாட்டால் அவற்றைத் தட்டிக் களிக்க நான் தயாரில்லை.
அண்மையில் பிரதமரின் விஜயம் பற்றி ஒரு அழைப்பிதழ் கிடைத்தது. அதை அனுப்பியவர் என்னைத் தெரிந்த திருமதி றோசி சேனாநாயக்க. திருமதி விஜயகலா மகேஸ்வரனின் அழைப்பின் பேரில பிரதமர் வருகின்றார் என்றும் அந்தக் குறிப்பிட்ட நிகழ்வில் என்னையும் பங்குபற்றுமாறு அழைக்கப்பட்டது. என்னைப் பிரதமரின் உத்தியோகபூர்வ அலுவலகம் அழைக்கவில்லை. பிரதமர் தமது விஜயம் பற்றி எம்முடன் கலந்தாலோசிக்கவுமில்லை.

அவர் சார்பான அழைப்பை விடுத்தது அவரின் கட்சியின் பிரமுகர் ஒருவர். கட்சியின் இன்னொருவரின் அழைப்பின் பேரிலேயே அவர் வருகை தந்தார். ஆக மொத்தம் இதன் அர்த்தம் என்ன? தமது கட்சியை இங்கு நிலைநாட்ட, அலுவலகங்களைத் திறந்து வைக்க, நேரடியாக மத்தியில் இருந்து மக்களுக்கு நன்மைகளைப் பெற்றுக்கொடுக்க என்று கட்சி முறையாகக் கூறவே பிரதமர் இங்கு வருகை தந்தார்.
இது முற்றிலும் ஒரு அரசியல் ரீதியான பயணம். எனவே நான் மக்களின் பிரதிநிதி என்ற முறையில் பிரதம மந்திரியின் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லையே என்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது. 225 மக்கள் பிரதிநிதிகள் கொண்ட நாடாளுமன்றத்தில் இன்று 45 பிரதிநிதிகளை மட்டுமே கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிப் பலம் பெற்று ஆண்டு வருகின்றது. அடுத்த பொதுத் தேர்தலில் தமக்கு என்ன கிடைக்குமோ என்ற பயம் உள்ளூரப் பிரதமரை வருத்திக் கொண்டுதான் இருக்கும்.

அதனால்த்தான் வடமாகாணத்தில் எப்படியாவது காலடி ஊன்ற அவர் பல நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். ஒரு பிரதமரை நாடினால் பல நன்மைகள் பெறலாம் என்பது எனக்கும் தெரிந்த விடயந்தான். ஆனால் அடுத்த பொதுத் தேர்தலில் என்ன நடக்கப் போகின்றது என்பதை அறியாது வடமாகாணத்தில் எம் மக்களின் செல்வாக்கைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்த அவர் விழையும் போது அதனை மக்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதும் எனது கடப்பாடுதான்.
இதிலே தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை. வடமாகாணத்தில் தமது கட்சியை நிலை நாட்ட பிரதமர் பகீரதப் பிரயத்தனங்களில் எங்கள் மக்களுக்கு விசுவாசமாக நாங்கள் நடந்து கொள்வது ஆகியன எந்தக் காலத்திலும் பிழையெனக் கொள்ள முடியாது.

நான் என் சொந்த நன்மை கருதியோ, சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு இடம் கொடுத்தோ முரண் நடவடிக்கைளில் வலி வடக்கில் உறுதியளித்த ஆயிரம் ஏக்கர்களில் 400 ஏக்கரை மட்டும் விடுவித்து விட்டு, அரசியல் ரீதியாக தமக்கு இலாபம் தேடும் பிரதமருடன் நான் எவ்வாறு கைகுலுக்கி மகிழ்ச்சியைத் தெரிவிப்பது? எமது மக்கள் எங்களை மாகாண ஆட்சிபீடம் ஏத்தியது சில காரணங்களை முன்வைத்து. அவை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாகத் தரப்பட்டுள்ளன.
இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. போர் முடிந்த பின்னர் அவர்களுக்கு வடமாகாணத்தில் எந்த வேலையும் இல்லை.
வேண்டுமெனில் பொலிஸாரின் தொகையைக் கூட்டட்டும். ஆனால் இராணுவத்தினர் மக்களின் காணிகளை மீளளித்து மக்கள் மத்தியில் இருந்து வெளியேற வேண்டும். இவ்வாறான முக்கிய விடயங்களை நாங்கள் அறுதியிறுதியாகப் பேசித் தீர்த்துக் கொள்ளாவிடில் பாதிக்கப்படப்போவது நாங்களே.

பிரதமரின் செயலால் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் எமது வடமாகாண சபைக்கிருக்கும் மிக நலிந்த மெலிந்த அதிகாரங்கள் பற்றிய உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. மத்தியால் எந்த அளவுக்கு மாகாணத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை எமக்குணர்த்தி வருகின்றார் பிரதமர். இதை எம்முள் சிலர் அறியாமல் மத்திக்கு மண்டியிட முனைந்துள்ளோம். இதிலே எமது மக்களின் உரித்துக்கள் அடங்கியுள்ளன.

இப்பேர்ப்பட்ட செயல்களை வெறும் மனித உறவுகளின் வெளிப்பாடு என்று கூறமுடியாது. ஆழமாக அமைந்திருக்கும் பக்கச்சார்பான எண்ணங்களின் வெளிப்பாடுகள் என்றே கொள்ள வேண்டும். இதன் காரணத்தினால்த் தான் மக்களாகிய உங்களுக்கு முன்னர் நான் பலமுறை கூறியதை இன்றும் இங்கு கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

மத்தியின் அரசாங்கம் தரும் அனைத்து நன்மைகளையும் இருகரம் நீட்டி வாங்கிக் கொள்ளுங்கள்! அவர்கள் அழைக்கும் கூட்டங்களுக்குப் போய் என்ன சொல்கின்றார்கள் என்பதைக் கேட்டுக் கொள்ளுங்கள்! ஆனால் தேர்தல் காலம் வந்ததும் ஒரு வாக்கையாவது தேசியக் கட்சிகள் என்று தம்மை அடையாளப்படுத்தி வரும் கட்சிகளுக்குக் கொடுக்காதீர்கள். மத்தி எமக்கு பிரதம செயலாளரை மாற்றியதைவிட அதுபற்றி வேறு எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை’ என தெரிவித்தார்.

Related Posts