Ad Widget

பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் கைது

மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட செந்தூரன், தனு போன்றவர்கள் மீண்டும் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்றில் யாழ்ப்பாண பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

யாழ்ப்பாணத்தில் பரவலாக இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில் தொடர்புபட்டிருந்த றொக்ஸ் ரீம் அங்கத்தவர்கள் யாழ் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 8 பேர் யாழ் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கடந்த 8 மாதங்களாகத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த நபர்களின் பிணை தொடர்பில் யாழ் மேல் நீதிமன்றத்தில் பிணை மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி குறித்த நபர்களுக்கு பிணை வழங்கினார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணம் தாவடிப்பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்றில் ஈடுபடுவதற்கு இரண்டு மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் வீதியில் அடாவடியில் ஈடுபட்டனர். கடமையில் இருந்த பொலிஸார் இவர்களை வழிமறித்த நிலையிலும் அவர்கள் நிற்காமல் தப்பிச் சென்றனர்.

இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் நடத்திய விசாரணைகளிலும், அப்பகுதி மக்களின் சாட்சியங்களின் அடிப்படையிலும் ரொக்ஸ் ரீமின் முக்கியஸ்தர்களான செந்தூரன், தனு என்பவர்கள் பொலிஸாரால் நேற்றுக்கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்கள் 28.02.2017 யாழ் நீதவான் நிதிமன்றில் நீதவான் சதீஸ்கரன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.வழக்கை விசாரித்த நீதவான் குறித்த நபர்களை மார்ச் மாதம் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிடடார்.

Related Posts