Ad Widget

பார்வையக்குறைபாடுடையவர்களுக்கான முப்பரிமாண கண்ணாடிகள், புதிய ஆராய்ச்சி

பெருமளவு பார்வை இழந்துவிட்டவர்களுக்கான ‘ஸ்மார்ட்’ கண்ணாடிகள், அதாவது கூர்மையான சிறப்புக்கண்ணாடிகளை தயாரிப்பதில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

சிறப்புக்கண்ணாடியின் வழியாக தெரியும் தோற்றம்
சிறப்புக்கண்ணாடியின் வழியாக தெரியும் தோற்றம்

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்களால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடிகளில் ஒரு சிறப்பு முப்பரிமாண கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.

இந்த கேமராவுக்கு கணினியுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த முப்பரிமாண கேமரா படம் பிடிக்கும் காட்சிகள் உடனுக்குடன் கணினிக்கு சென்று, அந்த கணினியில் இருந்து இந்த காட்சிகள் மீண்டும் இந்த சிறப்புக் கண்ணாடியில் முப்பரிமாணத் தோற்றத்தில் காட்டப்படுகிறது.

இப்படி முப்பரிமாண கேமராவால் படம் பிடிக்கப்பட்ட காட்சிகள் கணினியால் மேம்படுத்தப்பட்டு மீண்டும் கண்ணாடியில் தெரியும் போது அவை அதிக பிரகாசமாகவும் கூடுதல் தெளிவாகவும் இருக்கும். மிகவும் குறைந்த பார்வைத்திறன் உள்ளவர்களால் இந்த மேம்படுத்தப்பட்ட பிரகாசமான காட்சிகளை பார்க்க முடியும் என்பதால் அவர்கள் தாங்கள் இருக்கும் சூழலில் கூடுதல் எளிதாக நடமாட இந்த சிறப்புக்கண்ணாடி உதவுகிறது.

தற்போதைய நிலையில் இந்த சிறப்புக்கண்ணாடியானது அளவில் மிகப்பெரிய தலைக்கவசமாக இருக்கிறது. இந்த சிறப்புக்கண்ணாடி முதுகுப்பையில் உள்ள மடிக்கணினியுடன் ஒரு கேபிள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கண்ணாடியை பயன்படுத்துவோர் மிகப்பெரிய தலைக்கவசத்துடன், முதுகில் மடிக்கணினி சுமந்தபடி இருக்கவேண்டும் என்பது அசவுகரியமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் எதிர்காலத்தில் இந்த சிறப்புக்கண்ணாடியின் செயல்திறன் மேம்படுத்தப்படும்போது இந்த சிறப்பு முப்பரிமாணக்கண்ணாடியின் அளவு ஒரு சாதாரண கண்ணாடி அளவுக்கு இருக்கும் என்றும், அவற்றின் விலை ஒரு கைதொலைப்பேசியின் விலை அளவுக்கு குறைந்துவிடும் என்றும் இந்த சிறப்புக்கண்ணாடியை உருவாக்கிய ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

Related Posts