Ad Widget

பார்த்தீனியம் அழிப்புக்கு சட்ட நடவடிக்கை அலுவலர்கள் நியமனம்

வடமாகாணத்தில் பெருகிவரும் பார்த்தீனியச் செடிகளை அழிப்பதற்குரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென மாகாணத்தின் பல்வேறு திணைக்களங்களையும் சேர்ந்த 101 அலுவலர்களுக்கு மத்திய அரசால் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்குரிய நியமனங்களை வழங்கும் நிகழ்ச்சி நேற்று புதன்கிழமை (20.01.2016) திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு, அதிகாரம் அளிக்கப்பட்ட அலுவலர்களிடம் மத்திய அரசின் நியமனக் கடிதங்களையும் அடையாள அட்டைகளையும் வழங்கி வைத்துள்ளார்.

பார்த்தீனியம் விவசாயத்துக்கும், உடல்நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அந்நியக்களை ஆகும். இராட்சதக் களை என்று வர்ணிக்கப்படும் இச்செடி ஒருவரது வீட்டுவளவினுள் அல்லது விவசாயக் காணியில் காணப்படின், அதனை அழிக்கத்தவறியதைக் குற்றமாகக் கருதி அவர்மீது சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இக்களைகளை அழிக்கத் தவறுபவர்களுக்கு, இலங்கையின் 1995ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஒருமாதத்துக்குக் குறையாத ஆறுமாதங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனையை வழங்க முடியும். அல்லது, அவரிடம் இருந்து பத்தாயிரம் ரூபாவுக்குக் குறையாத ஒருஇலட்சம் ரூபாவுக்கு மேற்படாத தண்டப்பணத்தை அறவிடமுடியும். அல்லது, இரண்டு தண்டனைகளையுமே விதிக்கமுடியும்.

பார்த்தீனியம் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும்,பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் வடக்கு மாகாண விவசாய அமைச்சு பல செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளது. சிரமதானம், வேலைக்கு உணவுத் திட்டம், பார்த்தீனியம் கொள்வனவு, களைநாசினி விசிறுதல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதும் பொதுமக்களின் போதிய ஒத்துழைப்பு இல்லாமையால் பார்த்தீனியத்தின் பரவுதலை முற்றாகக் கட்டுப்படுத்த இயலவில்லை. இந்நிலையிலேயே, தற்போது பார்த்தீனியத்தை அழிக்கத் தவறுபவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் அலுவலர்களுக்கு மத்திய விவசாயத் திணைக்களத்தின் செயலாளர் நாயகத்தினால் அதிகாரம் அளிக்கப்பட்டு, அவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. விவசாயத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், உள்ராட்சித் திணைக்களம், கமநலசேவைத் திணைக்களம் ஆகிய திணைக்களங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள இந்த அலுவலர்கள் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் தமது நடவடிக்கைகளை ஆரம்பிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்குரிய நியமனங்களை வழங்கும் நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், மத்திய விவசாயத் திணைக்களத்தின் உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.யூ.பி.ஜெயசுந்தர, மல்லாகம் நீதிமன்ற சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்ட உதவியாளர் சி.கோகுலன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

Related Posts