வடபகுதியின் அபிவிருத்தி மற்றும் மக்களது ஜீவனோபாய நிலைகளை உயர்த்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரும்பாடுபட்டு, பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதை தான் நேரிலேயே உணர்ந்து கொண்டதாக கலாசார மற்றும் கலை விவகார அமைச்சர் ரி.பி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் பிற்பகல் உடுவில் பிரதேச செயலர் பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர் அமைச்சரவைக் கூட்டங்களின் போதும் பாராளுமன்றத்திலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடக்கு மாகாண மக்களின் நலன்கருதியே தொடர்ந்தும் கதைத்தும் அதற்காகவே செயற்பட்டும் விருப்பம் எனத் தெரிவித்தார்.
தனது அமைச்சின் கீழ் 18 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக் கலாசார நிலையத்தின் மூலம் இப்பகுதி மக்கள் உரிய பயனைப் பெற வேண்டும்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலாசார நிலையங்கள் இல்லாத பிரதேச செயலகப் பகுதிகளில் கலாசார நிலையங்களை அமைக்க வேண்டுமெனக் கோரியுள்ளார்.
அதனை நான் கூடிய விரைவில் நிறைவேற்றுவேன் என்றும் இக்கட்டிடத்தில் புதிதாக நூலகம் ஒன்றை அமைப்பதற்கும் நான் நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உடுவில் பிரதேச செயலர் திரு.நந்தகோபாலன் தலைமை தாங்கினார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் ரி.பி ஏக்கநாயக்க வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி, பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மற்றும் யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் இக்கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
கலாசார மற்றும் கலை விவகார அமைச்சின் செயலாளர் வசந்த ஏக்கநாயக்க நிகழ்வினை தெளிவுபடுத்தி உரை நிகழ்த்தினார்.
ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், உடுவில் பிரதேச செயலர் ஆகியோர் உரைகளை நிகழ்த்தினர்.