Ad Widget

பாதுகாப்பான கடவைகள் அமைக்க தொடர்ந்து பின்னடிக்கிறது ரயில்வே!

ரயில் கடவைகள் இல்லாத இடங்களில் ஏதாவது விபத்துக்கள் ஏற்பட்ட பின்னர்தான் அதனைப் பற்றிப் பேசுகின்றோம். இதனைத் தடுப்பதற்கு பாதுகாப்புக் கடவைகள் அமைக்குமாறு ரயில்வே திணைக்களத்துக்குப் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் அண்மையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ரயில்வே திணைக்களம் தொடர்பான விடயம் ஆராயப்படுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

யாழ். மாவட்டச் செயலகத்துக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்திருந்தார். இதன்பின்னர் அந்தப் பாதுகாப்புக் கடவையில், பாதுகாப்பு வேலி அமைக்குமாறு ரயில்வே திணைக்களத்தைக் கோரியிருந்தோம்.

அதிகளவானவர்கள் பயன்படுத்தும் கச்சேரி – நல்லூர் வீதியில் அமைந்திருக்கும் குறித்த ரயில் கடவைக்குப் பாதுகாப்பு வேலி அவசியம் என்பதை வலியுறுத்தியிருந்தோம். ஆனால் இதுவரையில் அது அமைக்கப்படவில்லை. ஏதாவது விபத்துக்கள் ஏற்படும்போதுதான் அதனைப் பற்றிப் பேசுகின்றோம். பின்னர் அதனைப் பற்றி நாம் அக்கறை கொள்வதில்லை என்று குறிப்பிட்டார்.

ரயில்வேத் திணைக்கள அதிகாரி கருத்துத் தெரிவிக்கையில்,
பாதுகாப்பு வேலி அமைக்கும் கடவைகள் மாத்திரம்தான் பாதுகாப்பான ரயில் கடவை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒலி எழுப்பும் சாதனம் உள்ள கடவைகளும் பாதுகாப்பான ரயில் கடவைகள்தான்.

மக்கள் நெருக்கத்தைப் பொறுத்து, ஒலி எழுப்பும் கருவி தனித்துப் பொருத்துவதும், அல்லது ஒலி எழுப்பும் கருவியுடன் பாதுகாப்பு வேலியும் அமைப்பதும் அமையும். அத்துடன் எமக்கு இங்கு பணியாளர்கள் மிகக் குறைவு. இதனை அதிகரித்துத் தருமாறு பலமுறை கோரியுள்ளோம் என்றார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கில் உள்ள ரயில் நிலையங்களில் எத்தனை தமிழர்கள் பணியாற்றுகின்றார்கள் ? எத்தனை பேர் வேறு இனத்தவர்கள் பணியாற்றுகின்றார்கள் என்ற விவரத்தைக் கோரினார். இன்றைய தினம் அந்த விவரங்கள் தெரியாவிட்டாலும் அடுத்த முறை அதனைத் தெரிவிக்குமாறும் அவர் கோரினார்.

Related Posts