Ad Widget

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை துணியை வழங்கத் திட்டம்!!

2021ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்படும் வவுச்சருக்கு பதிலாகச் சீருடை துணியை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர்களை வழங்குவதற்கான திட்டம் இருந்தபோதிலும், சீருடை வழங்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பாடசாலை சீருடைக்கான துணியை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சரை வழங்குவதற்கு பதிலாக தேசிய துணி தயாரிப்பாளர்களின் மூலம் சீருடைக்கான துணியை வழங்குவதற்காக 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக சம்பந்தப்பட்ட பெறுகை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு உள்ளூர் துணி தயாரிப்பாளர்கள் மாத்திரம் விலை விபரங்களை சமர்ப்பித்துள்ளனர்.

இந்த தயாரிப்பாளர்களினால் மொத்த துணி தேவையில் சுமார் 40 சதவீதம் தயாரிக்கப்பட்டிருப்பதாக இத்துறை பரிசோதனையின் மூலம் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் சீருடைகளுக்கு அவசியமான துணிகளை வழங்கும் பொறுப்பை உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளார்.

இந்நிலையில், பாரிய மற்றும் சிறியளவிலான உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உயர் தரத்திலான துணி உற்பத்தியை உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தங்கொட்டுவ, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளில் உள்ள ஆடை தொழிற்சாலைகளில் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

Related Posts