Ad Widget

பழைய வரலாற்றைத் திருப்பி உருவாக்காமல், உங்கள் படிப்பில் அக்கறை செலுத்தவும்;யாழ் இளவரசன் கனகராஜா!

இந்த புதிய ஆண்டு அனைவருக்கும் சமாதானம் சுபீட்சத்தை சந்தோஷத்தை கொண்டு வரவேண்டும் என வாழ்த்துத் தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பற்றியும் யாழ் றோயல் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசன் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் றேமியஸ் கனகராஜா தெரிவித்துள்ளார்.

பண்டைய யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த நல்லூர் ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முடிக்கு உரிய தற்போதைய இளவரசர் என்றும் சங்கிலி மன்னனின் வாரிசு என்றும் சுயம் பிரகடனம் செய்து இருப்பவர் ரெமிஜியஸ் கனகராஜா.சர்வதேச அரச குடும்பங்கள் இவரை யாழ்ப்பாண இளவரசர் என்று ஏற்றுக் கொண்டு உள்ளன.

இவர் வருடம் தோறும் புதுவருடத்தை முன்னிட்டு தமிழர்களுக்கு வாழ்த்துச் செய்தி விடுக்கின்றமை வழக்கம்.இவர் நெதர்லாந்தில் வசித்து வருகின்றார்.

அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில்,நாளை சூரிய அஸ்தமனத்தில் பிறக்கப்போகும் புத்தாண்டை நல்லபடியாக வரவேற்கப்போகும் இந்நிலையில் அண்மையில் யாழ்.பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்து, ஏனைய மாணவர்களையும் சரியாக நல்வழிப்படுத்தவேண்டும்.

கைது செய்யப்பட்ட மாணவர்களை தாமதிக்காமல் விடுதலை செய்யப்பட வேண்டும் என சட்ட அதிகாரிகளிடம், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமல் பாதுகாக்கவேண்டியது துணைவேந்தர்களின் கடமை எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.

பழைய வரலாற்றைத் திருப்பி உருவாக்காமல், உங்கள் படிப்பில் அக்கறை செலுத்துமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடமும், இலங்கைத்தீவில் உள்ள அனைத்து மாணவர்களிடம் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

சமாதானம் நிலைத்திருக்கும் இலங்கையில் மீண்டும் அச்சமாதானத்தை சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் எந்தவொரு பிரச்சினை எனினும் இருதரப்பினரும் பேசி ஒரு சுமூகநிலைக்கு வரவேண்டும் என தெரிவித்ததோடு, எதையும் உருவாக்குவது எளிதல்ல, ஆனால் அதை அழிப்பது மிக எளிது.

எனவே பிரச்சினை இருக்குமிடத்தில் அவற்றை உடனே பேசித் தீர்வு எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் எல்லோரும் சமமாக வாழ வேண்டும் என இப்புத்தாண்டில் தெரிவித்துக்கொள்வதாக கூறி தன் வாழ்த்தை முடித்துள்ளார்.

Related Posts