ஐ.நா விசாரணையை தாமதமின்றி வெளியிடக்கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் செவ்வாய்க்கிழமை (24) நடத்தப்படவுள்ள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு யாழ்.வர்த்தக சங்கமும் ஆதரவு தெரிவிப்பதாக வர்த்தக சங்கத்தலைவர் இ.ஜெயசேகரம் இன்று (23) தெரிவித்தார்.
பல்கலைக்கழக சமூகத்தினரால் நாளை முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு வர்த்தக சங்கத்தின் ஆதரவு குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
அரசியல் ரீதியற்ற பொதுமக்கள் சார்பாக பொது அமைப்புக்கள் ஊடாக இந்த ஆர்ப்பாட்டத்தை பல்கலைக்கழக சமூகம் முன்னெடுக்கும் போது, இந்தப் ஆர்ப்பாட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது.
ஐ.நா விசாரணை மூலம் தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்த அனைவருக்கும் இந்த அறிக்கை வெளிவருவதை தாமதப்படுத்தியது மிகவும் ஏமாற்றத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள், குற்றமிழைத்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும்.
பொதுமக்கள் சார்பாக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கும் வேண்டுகோளுக்கும் ஐ.நா முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என அவர் கூறினார்.