Ad Widget

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகரை உடன் மாற்றுமாறு மருத்துவர்கள் போர்க்கொடி

மந்திகை – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் மருத்துவர் த.குகதாசனை உடனடியாக இடமாற்றவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் அரச மருத்துவ அதிகாரி சங்கத்தின் மருத்துவர்கள், தவறும் பட்சத்தில் தொழிற் சங்க நடவடிக்கையில் இறங்குவோம் என்றும் எச்சரித்துள்ளனர்.

இதுதொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாணக் கிளை அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ள மருத்துவர்கள், கோரோனா நோய்த்தொற்று காணப்படும் இக்கட்டான இச் சூழ்நிலையில் வைத்தியசாலையில் தொடர்ந்து தமது பணிகளை முன்னெடுப்பதில் உள்ள சிக்கல் நிலைகளை முன்வைத்து உயர் அதிகாரிகளுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

“நீண்ட காலமாக வைத்தியசாலையில் காணப்படும் நிர்வாகம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் தற்போது உச்சமடைந்திருப்பதுடன் அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பான முறையிலும் ஒற்றுமையாகவும் கடமையாற்றுவதற்கு தற்போதைய நிர்வாகம் ஒத்துழைக்காத நிலையில் தற்போதைய அத்தியட்சகர் மருத்துவர் த.குகதாசனை உடனடியாக மாற்றம் செய்யவேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக கோரோனா சந்தேகத்துடன் வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளிகளை வகைப்படுத்தி சிகிச்சை முறைக்கு அனைத்து மருத்துவர்களும் முன்வந்திருந்த நிலையில் வைத்தியசாலை அத்தியட்சகர் தடங்கல்களை ஏற்படுத்தியிருந்தார். இதனை அடுத்து நேற்றைய தினம் (08.04.2020) வைத்தியசாலைக்கு வருகை தந்த மாகாண சுகாதாரப் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன், அவசரக் கூட்டம் ஒன்றினைக் கூட்டியிருந்த போதிலும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அத்தியட்சகர் மருத்துவர் த. குகதாசன் ஒத்துழைக்க மறுத்ததுடன் அவமரியாதையாகவும் நடந்து கொண்டார்.

மேலும் அனைத்து வைத்தியசாலைகளிலும் ஊரடங்கு வேளையில் மருந்து விநியோகம் சுமுகமாக நடைபெற்று வருகையில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் மாத்திரம் அத்தியட்சகர் அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தார். இதனால் ஆயிரக்கணக்கான நோயாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

கோரோனா என சந்தேகிக்கப்படும் நோயாளர்களைப் பார்வையிடும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு அங்கிகள் வேறு வைத்தியசாலைகளில் வழங்கப்பட்டிருந்த போதிலும் இங்கு கடமையாற்றும் மருத்துவர்களுக்கு அவை தேவையில்லை என அத்தியட்சகர் தெரிவித்திருந்தார்.

மேலும் கோரோனா சிகிச்சைக்கு என போதுமான நிதிவசதிகள் இருந்த போதிலும் இதற்கான தனியான விடுதி வசதிகளையோ உபகரண வசதிகளையோ ஏற்படுத்துவதற்கு தொடர்ச்சியாக இவர் மறுப்புத் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

அவசரகால நிலமையான இக்காலகட்டத்தில் கடமை நேரத்திலும் ஏனைய நேரங்களிலும் மருத்துவர்களாலும் ஏனைய உத்தியோகத்தர்களாலும் இவரைத் தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன.

கடந்த காலங்களில் மருத்துவர் த.குகதாசன் தொடர்பாக தொடர்ச்சியான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மருத்துவர்கள், இதர ஊழியர்கள் மற்றும் பொதுமக்களால் தொடர்ச்சியாக பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் ஆளுநருக்கும் நேரடியாகத் தெரிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மிக நீண்ட காலமாகவே வைத்தியசாலையில் பெரியளவான முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படுத்தப்படாமல் இருப்பதுடன் பெரும் நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களைப் பொது அமைப்புக்கள் முன்வைத்த வண்ணம் உள்ளன. இவர் தொடர்பான விரிவான முறைப்பாட்டினை மாகாண சுகாதாரப் பணிப்பாளர், மத்திய சுகாதார அமைச்சிற்குத் தெரியப்படுத்தியுள்ளார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமது நியாயமான கோரிக்கைக்காகவும் வைத்தியசாலை முன்னேற்றத்திற்காகவும் குறித்த மருத்துவ அத்தியட்சகரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறும் தவறும் பட்சத்தில் தாம் பணிப்புறக்கணிப்பிற்குச் செல்வதற்கான நிலைக்குத் தள்ளப்படுவோம் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்- என்றுள்ளது.

இதேவேளை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் மருத்துவர் த.குகதாசன் நேற்றையதினம் ஊடகவியலாளர்களைச் சந்தித்திருந்தார். இதன்போது அவர் தெரிவித்ததாவது;

காணொளி நன்றி – முதல்வன்

Related Posts