இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதிநிதிகளாகிய பிரதம நிறைவேற்று அதிகாரி சுகுமார் ரொக்வூட் மற்றும் முறைப்பாட்டு பெறுப்பதிகாரி எம்.எஸ்.அமீர் ஹூசைன் ஆகியோர் யாழ்.ஊடகவியலாளர்களை இன்று சந்தித்து கலந்துரையாடினார்கள்.
யாழ்.புகையிரத வீதியில் அமைந்துள்ள பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில், இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் பற்றிய அறிவூட்டல், ஊடகங்கள் அவற்றின் செய்தி மற்றும் தகவல் வெளியீடுகளின் போது கடைபிடிக்க வேண்டிய பொறுப்புணர்வு, பொதுமக்களுக்கு எற்படக்கூடிய பாதிப்புக்களைக் தவிர்த்தல், ஊடகத்துறையில் முகங்கொடுக்க நேரிடுகின்ற சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற விடயங்கள் தொடர்பில் பிரதிநிதிகளினால் விளக்கமளிக்கப்பட்டன.
இக்கலந்துரையாடலினைத் தொடர்ந்து, ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், யாழ்ப்பாணத்திலுள்ள முக்கியமான அதிகாரிகள் பலரையும் சந்திக்கவுள்ளதுடன், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகின்ற பத்திரிகை அலுவலகங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடனும் கலந்துரையாடவுள்ளனர்.
இதன்போது, 2014ஆம் ஆண்டு மீளாய்வு செய்யப்பட்ட பத்திரிகைத்துறையினருக்கான வழிகாட்டல்கள் அடங்கிய இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் ஒழுக்கக்கோவை பற்றியும் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.