Ad Widget

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூபாய் 10,000 – 50,000 வரை சலுகை வட்டியில் கடன் உதவி

ஒவ்வொரு குடும்பத்திற்கும் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலங்களில் அவர்களின் பல்வேறு தேவைகளை நிறைவு செய்ய சலுகை வட்டி விகிதத்தில் கடன் உதவியை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்த அறிவிப்பை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இந்தக் கடன் திட்டம் 03 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு அல்லது 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உழைப்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படும்.

மாத சம்பளம் அல்லது வருமானம் 25 ஆயிரம் ரூபாய்க்கு முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை உள்ளவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படும். மாத சம்பளம் அல்லது வருமானம் 25 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தால், கடன் தொகை 10 ஆயிரம் ரூபாய் ஆகும்.

இந்தக் கடனை இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிராந்திய அபிவிருத்தி வங்கி மற்றும் சமுர்த்தி வங்கி ஆகியன வழங்குகின்றன.

நிதி உதவி பெற விரும்பும் பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள ஊழியர்கள் தங்கள் மேலதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். நிறுவனத்தின் தலைவர் தனது ஊழியர்களின் சான்றளிக்கப்பட்ட சம்பளப் பட்டியலை வேலை செய்யும் இடத்திற்கு அருகிலுள்ள அரச வங்கியில் சமர்ப்பிக்கும் போது, ​​அந்த வங்கிக் கிளை ஊழியர்களின் கணக்கில் உடனடியாக அந்தக் கடன் தொகையை வரவு வைக்கும்.

கடனை 10 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். மாத வட்டி 0.625 சதவீதம். கடன் தொகை 2021 ஜனவரி முதல் ஒக்டோபர் 31 வரையிலான காலகட்டத்தில் ஊழியரின் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும்.

அரசு ஓய்வு பெற்றவர்கள் மற்றும் சமுர்த்தி பெறுநர்களுக்கு கடன் வழங்குவது ஓய்வூதியத் திணைக்களம் மற்றும் சமுர்த்தி வங்கியில் உள்ளது.

முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்கள், பாடசாலை வான்கள், பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் தங்கள் வங்கிக் கணக்கு பராமரிக்கப்படும் அரச வங்கியில் தங்கள் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிப்பதன் மூலம் சலுகைக் கடனுக்காக விண்ணப்பிக்கலாம்.

இந்த பிரிவிற்குள் வராத ஆனால் அரச வங்கிகளில் கணக்குகளை வைத்திருக்கும் நாளாந்த வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கும் தங்கள் வங்கிகளின் ஊடாக நிதி வசதிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கோவிட் 19 சவாலுக்கு மத்தியில் பின்னடைந்துள்ள பொருளாதாரம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக மீட்டு, 2020 ல் இழந்த முன்னேற்றத்துடன், 2021 ஆம் ஆண்டில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது அரசின் நோக்கமாகும்.

தொற்றுநோய் காலப்பகுதியில் சுமார் இரண்டு மாத பயணக் கட்டுப்பாட்டு காலத்தில் ஏற்றுமதி, சுற்றுலா, நிர்மாணத்துறை மற்றும் ஏனைய உற்பத்தி மற்றும் சேவைகளை படிப்படியாக இயல்பு நிலைக்கு கொண்டுவர உழைக்கும் மக்களும் வர்த்தக சமூகமும் பெரும் தியாகங்களைச் செய்தனர்.

இதற்கு சுகாதாரம், பாதுகாப்பு, பொலிஸ் மற்றும் அரச சேவைகளிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்தது. எனவே, 2020 ஆம் ஆண்டில் விவசாய உற்பத்தித் துறையில் ஒரு மறுமலர்ச்சிக்குள் பிரவேசிக்க முடிந்தது. நகர்ப்புற மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்கான உணவு விநியோகத்தை இது உறுதி செய்தது. அவ்வாறு பங்களித்த மக்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பாக பண்டிகை காலங்களில் இதுபோன்ற நிதி வசதிகள் திட்டமிடப்பட்டுள்ளன- என்றுள்ளது.

Related Posts