Ad Widget

படுகொலைகளைச் செய்த படையினரைக் காப்பாற்றும் முயற்சியில் இராணுவத் தளபதி!

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராகச் சுமத்தப்படும் படுகொலைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விட்டுக்கொடுப்பு அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு இலங்கை சட்டமா அதிபர் ஜயந்த ஜெயசூரியவிடம் இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

army-A W J C De Silva

சட்டமா அதிபரை அவரது பணியகத்தில் சந்தித்த இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக சத்ஹண்ட சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான காவல்துறை விசாரணைகள் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும்இ கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் பெயர்களை வெளியிட வேண்டாம் என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

எனினும், குற்றப்பு புலானாய்வுப் பிரிவினரின் விசாரணையை நியாயப்படுத்தியுள்ள சட்டமா அதிபர் ஆதாரங்களை மறைத்த குற்றச்சாட்டுக்கு சிறீலங்கா இராணுவம் பதிலளிக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கை அதிபர், பிரதமர் மற்றும் சர்வதேச சமூகம் என்பன இந்த விசாரணைகளில் சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்த சட்டமா அதிபர் ஜெனீவா அமர்வில் இந்த விடயம் தொடர்பாக பதிலளிக்கவேண்டியிருப்பதாகவும் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்குப்பின்னால் இருந்த அனைவரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அடையாளங் காணமுடிந்துள்ள நிலையிலேயே சிறீலங்கா இராணுவத் தளபதி சட்டமா அதிபரை அவசரமாகச் சந்தித்தார்.

இந்தப் படுகொலைக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவின் மேஜர் அன்சார் தலைமையிலான மூன்று குழுக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுபற்றிய விசாரணைக்காக இராணுவத்தின் நாளாந்தப் பதிவேட்டை ஒப்படைக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கேட்டபோது அதனை ஒப்படைக்க இராணுவத்தினர் தொடர்ந்தும் தயக்கங்காட்டி வருகின்றனர்.

லசந்த படுகொலை தொடர்பாக அப்போதிருந்த இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடமும் விசாரணை நடாத்தப்படவுள்ளது. கொலை நடந்தபோது சரத்பொன்சேகாவின் பாதுகாவலர்கள் எங்கே இருந்தார்கள் என்பதை விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன் முன்னைய இராணுவப் புலனாய்வுத்துறைத் தலைவர் பிரிகேடியர் சுரேஸ் சாலியையும் விசாரணை செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதி்மன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்தப் படுகொலை நடந்தபோது இவர் விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஐரோப்பாவில் தங்கியிருந்துவிட்டு இவர் 2009ஆம் ஆண்டு மார்ச் மாதமளவிலேயே சிறீலங்காவிற்கு வருகைதந்திருந்தார். தற்போது இவரிடமும் விசாரணை நடாத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இதனிடையே இந்த விசாரணைகள் தொடர்பாக சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா விசாரித்துள்ளார்.

அத்துடன் தமது படையினருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கோரியுள்ளார்.

அதற்கு காவல்துறை மா அதிபர், சட்டமா அதிபரின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டியது தமது கடமை என்று பதிலளித்துள்ளார் என்றும் சத்ஹண்ட செய்தி வெளியிட்டுள்ளது.

Related Posts