Ad Widget

படப்பிடிப்பில் அசுர வேகம் கொண்டவர் விஜய் ஆண்டனி: சாத்னா டைட்டஸ்

கேரளாவில் இருந்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கி உள்ள ‘பிச்சைக்காரன்’ படத்தில் கதாநாயகியாக சாத்னா டைட்டஸ் அறிமுகமாகிறார்.

இப்படம் குறித்து அவர் கூறும்போது, ‘இதுவரை என்னை தவிர சினிமாவில் என் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் நடித்ததில்லை. ஒரு சில விளம்பரங்களில் விளையாட்டாக நடித்து உள்ளேன். ஆனால் நான் சினிமாவுக்கு வரப் போகிறேன் என்றதும் என் குடும்பத்தில் பெரும் களேபரமே நடந்து விட்டது. நான் என் முடிவில் தீவிரமாக இருப்பதை பார்த்த என் பெற்றோர்கள், போனால் போகட்டும் என்றே நடிக்க விட்டார்கள்.

விளம்பரங்களுக்காக கேமரா முன்பு நான் நடித்து இருந்தாலும், சினிமா படப்பிடிப்பில் கேமரா முன் நிற்க முடியவில்லை. பயத்தில் கை கால் நடுங்க ஆரம்பித்து விட்டது. ஒரு நடிகையாக பின்நாளில் வர உள்ள புகழும், பெயரும் தான் இந்த அச்சத்தை தருகிறது என்று நினைக்கிறேன். ஆயினும் படப்பிடிப்பில் பயம் இன்றி நடிக்க எனக்கு தைரியம் கொடுத்த இயக்குனர் சசி, விஜய் ஆண்டனிக்கு நன்றி. இயக்குனர் சசி படத்தில் நடிப்பதற்கு நான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். அவரது படங்களில் கதாநாயகிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அப்படி இருக்கும்.

தமிழ் திரை உலகில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட ‘பூ’ மாரி, ‘படையப்பா’ நீலாம்பரி, ‘அலைபாயுதே’ சக்தி, ‘கஜினி’ கல்பனா என்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெறும் கதாபாத்திரங்கள் கிடைக்க வேண்டும் என்பதே என் ஆசை. சசி இயக்கத்தில் நடித்தால் அப்பேற்பட்ட கதாபாத்திரங்கள் கிடைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

விஜய் ஆண்டனி வெளித்தோற்றத்தில் மிகவும் மென்மையாக இருப்பவர். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அவரது வேகத்தில் ஒரு அசுர பலம் தெரியும். சினிமா, சினிமா, என்று எந்த நேரமும் அதே கவனத்தில் இருப்பார். தொடர்ந்து மூன்றுப் படங்கள் ஹிட் கொடுத்து இருப்பதின் சூட்சுமம் இதுதான் என்று நினைக்கிறேன். நான் பார்த்த வரையில் ‘பிச்சைக்காரன்’ படமும் அவரது வெற்றி பட்டியலில் நிச்சயம் சேரும். எனக்கு வாய்பளித்த, என் கனவை நனவாக்கிய விஜய் ஆண்டனி கார்ப்பரேஷன் நிறுவனத்தினருக்கு என் மனமார்ந்த நன்றி’ என்றார்.

Related Posts