நெடுந்தீவு வாள்வெட்டு – இருவர் காயம் – பொலிஸார் மீதும் தாக்குதல்

நெடுந்தீவு தனியார் விருந்தினர் விடுதி மதுபானசாலையில் நேற்று (16) இரவு 7.00 மணியளவில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் இருவர் வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருகிறதாவது…

நெடுந்தீவு மதுபானசாலையில் இன்று இரவு 7.00 மணியளவில் திடீரென புகுந்த இளைஞர் குழு, மதுபானசாலைக்குள் இருந்த இளைஞர் குழு மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் இரண்டு பேர் தலையிலும் முகத்திலும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மீதும் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட போது, ஒருவர் கைது செய்யப்பட்டு நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், தப்பிச் சென்றவர்களை தேடி கைது செய்யும் வகையில் பொலிஸார் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

வீதியில் சென்ற பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வாள்வெட்டு குழுவினர் மோட்டார் சைக்கிளில் பயணித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

குறித்த மதுபானசாலையில் இதற்கு முன்னரும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts