நெடுந்தீவு கடற்பரப்பில் ஆகஸ்ட் 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரையும் நாளை வியாழக்கிழமை (18) வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களும் இன்று (17) யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போதே இவர்களது விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கடந்த மாதம் 20ஆம் திகதி நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது 03.09.2025 வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்த நிலையில், அன்றைய தினம் வழக்கினை எடுத்துக்கொண்ட நீதவான் இன்று (17) வரை விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.
அதன்படி, இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 7 மீனவர்களது விளக்கமறியலை நாளை (18) வரை நீடித்து நீதவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவு பிறப்பித்தார்.