Ad Widget

நெடுந்தீவில் ஐவர் வெட்டிப் படுகொலை! ஆறாவது நபர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி ! விசாரணைகள் தீவிரம்!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் இறங்கு துறைக்கு அண்மித்த வீடொன்றில் இன்று(22) காலை ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.3 பெண்களும் இரண்டு ஆண்களும் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று காலை இனந்தெரியாத சிலர் குறித்த வீட்டுக்குள் பிரவேசித்து இந்த கொலையை புரிந்திருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொலையுண்டவர்களில் 3 பேர் வெளிநாடொன்றில் இருந்து இலங்கை வந்து அங்கு தங்கியிருந்தவர்கள் என்றும் ஏனையவர்கள் அவர்களது உறவினர்கள் என்றும் தெரியவந்துள்ளது.கொலைக்கான காரணம் என்ன என்றோ சந்தேகநபர்கள் குறித்த விபரங்களோ எவையும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.படுகாயமடைந்தவர் வெளிநாட்டிருந்து வந்திருந்தவர்களில் ஒருவர் என தெரியவந்துள்ளது.சம்பவத்தின் போது போது வீட்டின் உரிமையாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூவர் என ஆறுபேர் தங்கியிருந்தனர் என அறியக்கிடைத்துள்ளது.மேற்படி வீட்டின் உரிமையாளரான பெண்ணின் கணவர் 1986 ல் சிறீலங்கா கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட குமுதினி படகு படுகொலையில் கொல்லப்பட்டவர் ஆவார் .

நெடுந்தீவின் பாதுகாப்பு கடற்படை வசமுள்ள நிலையில், கடற்படையின் பிரதான முகாமுக்கு எதி்ர் வீட்டில் இக் கொலைச் சம்பவம் பதிவாகியுள்ளதானது அப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.இதுதொடர்பாக வட மாகாணத்திற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நெடுந்தீவு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நடமாட்டங்கள் தொடர்பாகவும், இன்று நெடுந்தீவை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பாகவும் அவதானம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கியதுடன், இக்கொலைகள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட்டு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அச்சத்தினை விரைவில் களைய வேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ளார்.

,இதே வேளை நெடுந்தீவு குறிக்கட்டுவான் இடையேயான படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலையை தொடர்ந்து குற்றவாளிகள் தப்பிக்க செல்வதை தடுக்கும் வகையில் குறித்த படகு சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன் உள்ளிட்ட விசேட பொலிஸ் படை மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் நெடுந்தீவுக்கு பயணம் செய்வதற்காக குறிக்கட்டுவானுக்கு செல்லவுள்ளனரென அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Posts