Ad Widget

நீர்வேலித் தரவையில் படையினரின் மலக்கழிவுகள் – சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக வடக்கு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருக்கும் படையினர் தங்கள் மலக்கழிவுகளை நீர்வேலித் தரவை வெளியில் கொட்டிவருவதால் சுற்றச்சூழல் மோசமாகப் பாதிக்கப்பட்டுவருவதாக வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று புதன்கிழமை (15.10.2014) தொண்டைமானாறில் வடமாகாண நீரியல் ஆய்வு மையத்தின் திறப்புவிழாவில் உரையாற்றும்போதே இவ்வாறு குற்றம் சாடியுள்ளார்.

அவர் தனது உரையில்,
யாழ்குடாநாட்டில் நிலத்தடி நீரின் தரம் விவசாய இரசாயனங்களாலும், மலக்கிருமிகளாலும் மாசடைந்துவருவது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அண்மையில் நீர்வழங்கல் வடிகால் சபையினரும் யாழ் மாநகரசபைக்குட்பட்ட கரையோரப் பகுதிகளில் குடிநீரில் மலக்கிருமிகள் காணப்படுவதாகவும், அதனால் போத்தல் குடிநீரையே வாங்கி அருந்துமாறும் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

குடிநீரைக் கொதிக்கவைத்து ஆறிய பின்னர் குடியுங்கள் என்று சொல்லாமல், போத்தல் குடிநீரின் விற்பனையை ஊக்குவிக்கும் விளம்பர வாகனம்போல போத்தல் குடிநீரை வாங்கி அருந்துங்கள் என்று அவர்கள் சொல்லிவருவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. பொதுமக்களை அச்சப்படவைத்து, போத்தல் குடிநீரை வாங்கவைத்துப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் துணைபோகும் முயற்சியில் அரச துறைகள் ஈடுபடக்கூடாது.
எமது கழிவகற்று முறைகளில் உள்ள குறைபாடே குடிநீரில் மலக்கிருமிகள் கலப்பதற்கான பிரதானமான காரணமாக உள்ளது. எமது நிலம் நுண்துளைகளைக் கொண்ட மயோசின் பாறைகளால் ஆனது. முறையான கழிவு முகாமைத்துவம் இல்லாதபோது, மலக்கழிவுநீர் மயோசின் பாறைகளின் நுண்ணிய துளைகளினூடாக வடிந்து மலக்கிருமிகள் குடிநீருடன் கலந்துவிடுகின்றன.
யாழ் மாநகரசபையினர் மலக்கழிவுகளை அப்படியே ஏற்றிச்சென்று கல்லுண்டாய் வெளியில் கொட்டி வருகின்றன. இதற்கு அவர்களின் நிர்வாகச் சீர்கேட்டையோ அல்லது அவர்களிடம் கழிவகற்றும் முறைகளை மேம்படுத்துவதற்குப் போதிய நிதி இல்லாததையோ காரணங்களாகச் சொல்லலாம்.
ஆனால், சகல அதிகாரங்களையும், சகல வளங்களையும் கொண்டிருக்கும் படையினரும் அவ்வாறுதான் செய்கிறார்கள். தங்கள் மலக்கழிவுகளை நீர்வேலித் தரவையில் கொட்டிவருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மோசமாகப் பாதிக்கப்பட்டுவருகிறது. 80களில் விமானத்தில் இருந்து மலப்பீப்பாய்களை யாழ் குடாநாட்டு மக்களின் மீது வீசிய படையினருக்கு இது பெரிய விடயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் குடாநாட்டின் குடிநீரில் மலக்கிருமிகள் என்று பேசும் அதிகாரிகள் படையினரின் இந்த நடவடிக்கைகள் குறித்துப் பேசாமல் இருப்பது வேதனையானது என்று தெரிவித்துள்ளார்.

06   05

13   14

11

 

Related Posts