Ad Widget

நீதிமன்ற வளாகத்திலிருந்து ஆவா குழுத் தலைவர் தப்பியோட்டம்!

யாழில் இடம்பெற்ற பிரதான வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரும், ஆவா குழுவின் தலைவருமான விக்டர் நிசா எனப்படும் நிசாந்தன் நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பியோடியுள்ளார்.

யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேக நபரை, மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த இன்று (வெள்ளிக்கிழமை) அழைத்துச் சென்றபோது அவர் தப்பிச் சென்றுள்ளார்

குறித்த சந்தேகநபருக்கு நேற்று யாழ். நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்திருந்த போதிலும், அவரை பிணையில் எடுக்க எவரும் முன்வராத நிலையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கட்டார்.

இந்நிலையில், மானிப்பாயில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கில் முற்படுத்துவதற்காக அவரை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மல்லாகம் நீதிமன்றுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பித்த விக்டர் நிசா, மல்லாகம் நீதிமன்ற மதில் பாய்ந்து ஓடினார்.

நீதிமன்ற மதிலுக்கு வெளிப்புறமாக மோட்டார் சைக்கிளில் காத்திருந்த ஒருவர் விக்டர் நிசாவை ஏற்றிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் பொலிஸாரும் முன்னெடுத்த தேடுதலில் மல்லாகம் பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து விக்டர. நிசா கைது செய்யப்பட்டார்.

யாழ்.கோப்பாய் பகுதியில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதான வாள் வெட்டு தாக்குதல் தொடர்பில், அவர்களை தானே வெட்டியதாக, விக்டர் நிசா கடந்த ஓகஸ்ட் வாக்குமூலம் அளித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related Posts