Ad Widget

நீதிமன்ற தாக்குதல் 15 பேரிற்கு பிணை ஏனையோரிற்கு விளக்கமறியல் நீடிப்பு

வித்தியாவின் படுகொலையினை அடுத்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் நீதிமன்றம் தாக்கப்பட்டமை உள்ளிட்டவற்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 130 பேரில் 15 பள்ளி மாணவர்களை கடும் எச்சரிக்கையுடன் பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டமையினைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் திகதி பல்வேறு போராட்டங்கள் யாழ்.நகரில் முன்னெடுக்கப்பட்டதுடன் ஆர்ப்பாட்டகாரர்களால் நீதிமன்ற கட்டிட தொகுதி, சிறைச்சாலைவாகனம் மற்றும் சட்டத்தரணிகளின் வாகனத்தையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

இதனையடுத்து 130 பேர் அன்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 21ஆம் திகதி குறித்த 130 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு மூன்று பிரிவுகளாக வழக்குத்தொடுக்கப்பட்டு அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

அதன்படி கடந்த முதலாம், மூன்றாம், நான்காம் திகதிகளில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கடந்த 1ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள் 47 பேருக்கும் பிணை மனு மன்றில் சட்டத்தரணிகளால் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து குறித்த வழக்கு இன்று மீண்டும் நீதவான் சிவகுமார் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே 15 பாடசாலை மாணவர்களையும் கடும்நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல மன்று அனுமதி வழங்கப்பட்டது.

இதன் போது பிணையில் விடுதலை செய்யப்பட்ட பதினைந்து பேரில் 12பேரிற்கு 5லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ஆட் பிணையிலும் மற்றைய மூவருக்கும் 2லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ஆட் பிணையிலும் செல்ல மன்று அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன் பிணையாளிகள் சந்தேகநபர்களை பிணையெடுப்பதற்கான தகுதி பெற்றுள்ளார் என்பதை கிராமசேவகர் ஊடாக பிரதேச செயலரும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் பிணையில் அனுமதிக்கப்பட்ட சந்தேக நபர்கள் ஒவ்வொருவாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ். பொலிஸ் நிலையத்தில் காலை 9 மணிமுதல் மதியம் 12 மணிக்குள் கையொப்பம் இடவேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய தினம் பிணை வழங்கப்படாத எனையோரிற்கான விளக்கமறியல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts