Ad Widget

நீதிமன்ற தாக்குதல்; 14பேருக்கு பிணை

யாழ். நீதிமன்றத்தின் மீது கடந்த மே மாதம் 20ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 14 பேருக்கு தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொந்த பிணையில் செல்ல, யாழ் நீதவான் பொ.சிவகுமார் இன்று வெள்ளிக்கிழமை (12) உத்தரவிட்டார்.

அத்துடன், மாணவர் ஒருவரை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணைகளில் செல்லவும் நீதவான் அனுமதியளித்தார்.

யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டமை, யாழ்.நகரப்பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் காண்காணிப்பகத்தை தாக்கியமை, வீதிகளில் ரயர் எரித்தமை மற்றும் வீதிச் சமிக்ஞை விளக்கை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் 130பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில், நீதிமன்ற கட்டடத் தொகுதியில் மீது தாக்குதல் மேற்கொண்டமை, சிறைச்சாலை வாகனங்களை அடித்து சேதமாக்கியமை, கடமையிலிருந்த பொலிஸாரை காயப்படுத்தியமை, ஆகிய மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 43பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இவர்களில் உள்ளடங்கியிருந்த இந்தியப் பிரஜை கடந்த 8ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்படி குற்றத்துடன் தொடர்புடையவர்கள் என 54 பேரை ஆஜர்ப்படுத்தப்படுத்தினர். இவர்களின் 12பேர் வீடியோ ஆதாரங்களை வைத்து கடந்த சில நாட்களில் விசேட குற்றத்தடுப்பப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்கள்.

விசாரணையின் போது, பிணை முறி வழங்கப்பட்ட 14 பேரின் பெயர்களை மன்றில் குறிப்பிட்ட பொலிஸார் இவர்கள் குற்றஞ் செய்தமை தொடர்பாக வீடியோ ஆதாரங்கள் மற்றும் ஏனைய விசாரணைகள் தொடர்பில் ஆதாரங்கள் இல்லையெனவும், இவர்களை வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு ஆட்சேபனை இல்லையென தெரிவித்தனர்.

இந்த வழக்குத் தொடர்பான விசாரணைக்கு, நீதிமன்றம் அழைப்பு விடுக்கும் பட்சத்தில் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்க வேண்டும் என்ற நிபந்தனையில் அடிப்படையில் 14 பேருக்கும் நீதவான் பிணை வழங்கினார். ஏனைய 39 பேரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Related Posts