Ad Widget

நீதிமன்ற தாக்குதல் சம்பவம்: 8 பேருக்கு பிணை

யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டடத் தொகுதியின் மீது, தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 பேரையும் பிணையில் செல்ல யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பெ.சிவகுமார் அனுமதித்தார்.

5 இலட்சம் ரூபாய் பெறுமதியான தலா ஐந்து ஆட்பிணையில் செல்வதற்கு ஒவ்வொருவரும் நீதவான் அனுமதியளித்தார்.

கடந்த வழக்குத் தவணையில் 16 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 8 பேர், மேல் நீதிமன்றத்தின் மூலம் பிணை கோரி விண்ணப்பம் செய்ததுடன் மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டது.

இந்நிலையில், மிகுதி 8 பேருடைய வழக்கு, நேற்று நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, 8 பேரையும் பிணையில் செல்ல நீதவான் அனுமதியளித்தார். இந்த வழக்கை டிசெம்பர் மாதம் 8ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

கடந்த மே மாதம் 20ஆம் திகதி நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு படிப்படியாக பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு எதிராக நீதிமன்ற கட்டடத் தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொண்டமை, பொலிஸாரை அடித்துக் காயப்படுத்தியமை மற்றும் சிறைச்சாலை வாகனங்களை சேதமாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், நீதிமன்றத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts