Ad Widget

நீதிமன்ற உத்தரவின்றி கல்லுண்டாய் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை நிறுத்த முடியாது

கல்லுண்டாய் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மாத்திரமே நிறுத்த முடியும். மக்கள் வேண்டுமென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் என யாழ்.மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகள் கல்லுண்டாயில் கொட்டப்படுவதை நிறுத்தக்கோரி அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மக்களுடன் பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

15 வருடங்களுக்கு முன்னர் இந்த இடத்தை அப்போதய யாழ்.மாவட்டச் செயலாளர் யாழ்.மாநகர சபைக்கு வழங்கினார். இதற்கான உறுதி யாழ்.மாநகர சபையிடம் உள்ளது. எனவே இப்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை நிறுத்த முடியாது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அல்லது நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மாத்திரமே இங்கு கழிவுகள் கொட்டப்படுவதை நிறுத்த முடியும். மக்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் சரியென்றால் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடருங்கள்.

ஆரம்பத்தில் இப்பகுதியில் முறைகேடாக கழிவுகள் கொட்டப்பட்டமை உண்மை. ஆனால் தற்போது அது திருத்தப்பட்டு முதலமைச்சரின் ஆலோசனையின் படி சரியாக பேணப்பட்டு வருகின்றது. இந்த இடத்தில் அமர்ந்து தற்போது என்னால் உணவு உட்கொள்ள முடியும்.

நான் சரியான அணுகுமுறையை பின்பற்றுகின்றேன். விடுமுறை தினத்திலும் இந்த இடத்துக்கு வரவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

நான் சபையின் ஆணையளராக பொறுப்பேற்பதற்கு முன்னதாகவே இவ்விடத்தில் கழிவுகள் கொட்டப்படுகின்றன. புதிதாக கொட்டப்படவில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும் என்றார்.

இந்த கருத்துத் தொடர்பில் மக்கள் பதில் கருத்து கூறுகையில்,

நாங்கள் வழக்கு தொடரும் நிலையில் இல்லை. அதற்கான பணமும் எங்களிடம் இல்லை. அவ்வாறு வழக்கு தொடர்ந்து தீர்ப்பு வருவதற்கு முன்னர் இங்குள்ள மக்கள் இறந்து விடுவார்கள். மாநகர சபையின் சொந்தமான காணி என்பதை உறுதிப்படுத்தும் உறுதியை கொண்டு வாருங்கள். அதுவரையில் இங்கு கழிவு கொட்டுவதற்கு அனுதிக்கமாட்டோம்.

மக்களுக்காகத்தான் நீதிமன்றங்கள். நீதிமன்றங்களுக்காக மக்கள் இல்லை. எம்மிடம் அரசியல் கதைக்க வேண்டாம். மாற்று இடத்தை தெரிவு செய்து அங்கு குப்பைகளை கொட்டுங்கள். எமது பூமியை அசுத்தமாக்கவேண்டாம் என்று மக்கள் கூறினர்.

Related Posts