Ad Widget

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்கும் பிரேரணைக்கு அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டுவரும் புதிய அரசியல் சாசன சீர்திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது.

இலங்கையில் மீள்குடியேற்றம் மற்றும் இந்து விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரான டி எம் சுவாமிநாதன் இதனை உறுதிப்படுத்தினார்.

முன்வைக்கப்பட்டுள்ள 19ஆவது அரசியல் சட்டத் திருத்த பிரேரணையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • இலங்கையயில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை அகற்றப்பட்டு, ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றமும் சேர்ந்து நிர்வகிக்கும் ஆட்சி முறையாக இலங்கை மாறும்,
  • இனி இலங்கையில் அனைத்து தேர்தலிலும் விகிதாச்சார முறை நீக்கப்பட்டு, ஒவ்வொரு தொகுதியிலும் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றிபெற்றவர் என்ற முறை கடைப்பிடிக்கப்படும்.
  • ஒருவர் அதிகபட்சமாக இரண்டு ஆட்சிக்காலத்துக்கு மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்ற நிபந்தனை மீண்டும் கொண்டுவரப்படுகிறது.
  • ஜனாதிபதியின் ஒரு ஆட்சிக்காலம் என்பது ஆறு ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்படும்.
  • நாடாளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டு ஓராண்டு கடந்துவிட்ட பின்னர், அதனை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்காது. ஒரு நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னர்தான் அதனைக் கலைக்கும் உரிமை மறுபடியும் ஜனாதிபதிக்கு வரும்.
  • ஒருவர் ஜனாதிபதியாக இருக்கும்போது அவர் உத்தியோகபூர்வமாக செய்யும் காரியங்களை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு இருந்துவருகின்ற சட்டத் தடை அகற்றப்படும்.
  • இலங்கையில் அதிகபட்சமாக 30 பேரே காபினட் அந்தஸ்துடைய அமைச்சர்களாகவும், அதிகபட்சமாக 40 பேரே துணை அமைச்சர்களாகவும் என ஆக மொத்தம் 70 பேரே அமைச்சர்களாக இருக்க முடியும் என்ற வரம்பு ஏற்படுத்தப்படுகிறது.
  • 17ஆம் அரசியல் சட்டத் திருத்தம் மீண்டும் நடைமுறைப்படும்.
  • நாட்டின் ஆணைக்குழுக்கள் ஜனாதிபதியால் அல்லாமல் சுயாதீனமான முறையில் மீண்டும் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்றும் இந்தத் திருத்தம் அமையும்.
  • ஆனாலும், அமைச்சரவையின் தலைவராகவும், முப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் தொடர்ந்தும் ஜனாதிபதியே விளங்குவார்.
  • பிரதமரையும் அமைச்சர்களையும் நியமிக்கும் அதிகாரம் தொடர்ந்து ஜனாதிபதிக்கு இருக்கும்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் ஞாயிறன்று அவசரமாகக் கூடியிருந்த இலங்கை அமைச்சரவை, இலங்கை அரசியல் யாப்பின் 19ஆவது சட்டத் திருத்தமாக அமையக்கூடிய இந்த புதிய மாற்றங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

புதிய விதிகள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிக்கை ஞாயிறு இரவு பின்னேரம் வெளியிடப்படவுள்ளது.

மேலும் வரும் செவ்வாய்க்கிழமை தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பில் ஒரு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த சீர்திருத்தங்கள், ஒரு வழமையான சட்டப் பிரேரணையாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்த பிரேரணைக்கு நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து முக்கியக் கட்சிகளின் ஆதரவும் கிடைத்தால்தான் இது சட்டமாக நிறைவேறும்.

இலங்கையில் ஜனாதிபதியிடம் இருந்த நிறைவேற்று அதிகாரங்கள் நாடாளுமன்றத்துக்கும் நீதித்துறைக்கும் மாற்றமாகும்

Related Posts