Ad Widget

நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த புதிய அரசாங்கம் ஆவன செய்யும் – சி.வி.விக்னேஷ்வரன்

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் எந்த இடையூறுகளும் இன்றி நடைபெறுவதற்கு புதிய அரசாங்கம் ஆவன செய்யும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மாவீரர் தினத்தை முன்னிட்டு அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் வென்றெடுப்பதற்குமாக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த விடுதலை வீரர்களை நினனவுகூர்ந்து நினைவு நாள் அனுஷ்டிப்பது வரலாற்று காலம் தொட்டு உலகம் பூராகவும் மனித நாகரிகத்தின் முக்கிய பண்பாக காணப்படுகின்றது.

ஆனால், யுத்தம் நடைபெற்றபோது தமது உயிர்களை நீத்த விடுதலை வீரர்களை கார்த்திகை மாதத்தில் நினைவு கூருவதற்கு கடந்த காலங்களில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு பல்வேறு தடைகளும் இடைஞ்சல்களும் நாகரிகமற்ற முறையில் ஏற்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.

இருந்தபோதிலும், சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதி ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத முறையில் மிகவும் அமைதியான முறையில் உணர்வுபூர்வமாக கார்த்திகை மாத நினைவுகூரலை எமது மக்கள் செய்துவருகிறார்கள்.

நாளை 27 ஆம் திகதி வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் நினைவு நாள் நிகழ்வுகள் அமைதியான முறையில் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அறிகின்றேன்.

அமைதியான வழியில் உரிய சட்ட வழிமுறைகளை பின்பற்றி எமது மக்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றேன்.

நாட்டில் நிலையான சமாதானத்தையும் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு பாடுபடுவதாக கூறியிருக்கும் புதிய அரசாங்கம் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் எந்த இடையூறுகளும் இன்றி நடைபெறுவதற்கு ஆவன செய்யும் என்று எதிர்பார்க்கிறேன்.

எமது மக்கள் சுதந்திரமாகவும் சகல உரிமைகளுடனும் வாழவேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த எமது விடுதலை வீரர்கள் எமது மக்களின் மனங்களில் எப்போதுமே வாழ்ந்துகொண்டிருப்பர்” என மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts