Ad Widget

நாமல் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ள முடியாது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளாமைக்கான காரணத்தை விளக்கியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் சீ.பி.ரட்நாயக்கவின் மகன் அபீத ரட்நாயக்க – திலினி சாபா ஆகியோரின் திருமண நிகழ்வு அண்மையில் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சம்பாஷனையின் போது இந்த விடயத்தை விளக்கியுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ திருமண பந்தத்தில் இணைந்து கொள்ள இது பொருத்தமான காலம் என நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புன்னகைத்துள்ளார்.

சில காலமாக எனது தந்தையும் தாயும் மணமகள் தேடி வருகின்றனர். எனினும் திருமணம் செய்து கொள்ளாமை அதிர்ஷ்டமாகவே கருதுகின்றேன் என நாமல் தெரிவித்துள்ளார்.

அது எப்படி அதிர்ஷ்டமாகும் என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

“ திருமணம் செய்திருந்தால், அந்தப் பிள்ளையும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு, ஜனாதிபதி ஆணைக்குழு போன்றவற்றுக்கு அழைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிப்பார். அவ்வாறு விசாரணைகளுக்கு சென்றே என்னை வெறுத்தே என்னிடமிருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டிருப்பார்” என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அப்படியென்றால் நாமலுக்கு திருமண பந்தத்தில் இணைந்து கொள்ள முடியாது என மஹிந்த யாபா அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

நாமல் இல்லை ராஜபக்ஷ என்ற பெயருடைய எவரும் திருமணம் செய்தால் பிரச்சினையே ஏற்படும். எங்கு உணவு எடுத்தீர்கள்? யார் பரிசு வழங்கியது? செலவுகள் எவ்வாறு? என கேள்வி எழுப்பப்படும் என முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த மஹிந்த இரவு 9.30 அளவில் ஹோட்டலை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் 10 நிமிடங்கள் கழித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.

Related Posts