விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு, வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்தார்.
எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இதற்கமைய, வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில் அவர் தங்கியுள்ள வளாகத்தில் விசேட பாதுகாப்புத் திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் கூறினார்.
மேலும், அவரைப் பார்ப்பதற்கு நாளொன்றுக்கு மூவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாமல் ராஜபக்ஷவின் தாயாரான ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (07) முற்பகல் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று நாமல் ராஜபக்ஷவின் நலனை விசாரித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவும் இன்று காலை நாமல் ராஜபக்ஷவைப் பார்ப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.