Ad Widget

நானும் பாலியல் கொடுமைக்கு ஆளானேன்: காதல் சந்தியா

கேரளாவில் ஓடும் காரில் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பற்றி அவர் துணிச்சலாக புகார் கொடுத்ததை தொடர்ந்து இதில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இதைப்போல பாதிக்கப்பட்ட பலரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை தற்போது வெளிப்படுத்தி வருகிறார்கள்.

நடிகை மேனகா, அவரது மகள் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தங்களையும் கடத்த முயற்சி நடந்த தகவலை வெளிப்படுத்தி உள்ளனர். நடிகை வரலட்சுமியும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சி நடந்ததாக திடுக்கிடும் புகார் கூறி உள்ளார்.

இந்த நிலையில் நடிகை காதல் சந்தியாவும் இதுபற்றி பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார். சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய காதல் சந்தியா கூறியதாவது:-

பாவனா எனது நெருங்கிய தோழி. அவர் மிகவும் தைரியசாலி. அவரது தைரியம் தான் அவர் மீதான பாலியல் கொடுமை பற்றி புகார் கொடுக்கவும், அதை வெளிப்படுத்தவும் அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளது.

பாவனாவின் துணிச்சலை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது. அவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு விடுவார் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது.

நானும் பாலியல் கொடுமைக்கு ஆளானவள்தான் என்பதை இங்கு கூறிக் கொள்கிறேன். இதுபற்றி முன்பே மக்கள் முன்பு தெரிவிக்கவோ, போலீசில் புகார் செய்யவோ எனக்கு தைரியம் இல்லாமல் இருந்ததால் இதுபற்றி இதுவரை யாரிடமும் கூறாமல் இருந்து விட்டேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

சந்தியாவுக்கு தற்போது திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Related Posts