Ad Widget

நாடொன்றுக்கு 104 பேரை கடத்த முயற்சித்தவருக்கு விளக்கமறியல்!

நாடொன்றுக்கு 104 பேரை ஆள்கடத்த முயற்சித்த நபரை ஜனவரி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நேற்றைய தினம் (திங்கட்கிழமை) குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போதே நீதிமன்றம் உத்தரவிட்டது.

மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லீம்கள் பங்களாதேசில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம் இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக பயணித்தபோது யாழ்ப்பாணம் மருதங்கேணி அருகே நடுக்கடலில் படகு பழுதடைந்து தத்தளித்தனர்.

இவ்வாறு தத்தளித்தவர்கள் 2022 டிசம்பர் 17ம் திகதி இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு டிசம்பர் 18ம் திகதி கடற்படையினரால் காப்பாற்றப்பட்டனர்.

சட்டத்துக்கு புறம்பாக இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 104 பேர் மற்றும் அவர்களை சட்டத்துக்கு புறம்பாக நாடு கடத்த முற்பட்ட வலையமைப்புக்கு உதவியவருக்கும் எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் காங்கேசன்துறை பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.

டிசம்பர் 19ம் திகதி மாலை 105 பேரும் தடுத்து வைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட மல்லாகம் நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன்,104 பேரையும் அகதிகளுக்கான ஐ.நா ஆணையகம் பொறுப்பேற்பதாயின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி பெற உத்தரவிட்டதுடன் அகதிகள் அனைவரையும் மீரிகான தடுப்பு முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டார். அத்துடன், நாடொன்றுக்கு 104 பேரையும் கடத்த முயற்சித்தவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையிலேயே நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோதே நீதமன்றம் இந்த உத்தரவு இட்டது.
104 ரோஹிங்கிய அகதிகளும் மீரிகான தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts