Ad Widget

நாகதீப பெயரை நயினாதீவு என மாற்றக்கூடாது! வட மாகாண சபையின் தீர்மானம் முட்டாள்தனமானது!!

‘நாகதீப’ என்ற பெயரை ‘நயினாதீவு’ என பெயர் மாற்றும் வடக்கு மாகாண சபையின் தீர்மானம் முட்டாள் தனமானது. நாகதீப என்பதை நயினாதீவு என மாற்றக்கூடாது. இதற்கு நானும் எதிர்ப்பே. – இப்படித் ‘திவயின’ சிங்கள வார இதழுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.

நயினாதீவின் சில பகுதிகள் தமிழில் நாகதீப எனப் பெயர் மாற்றப்பட்டது. இதையடுத்து தமிழில் நாகதீப எனப் பெயர் மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் அதனை மீண்டும் நயினாதீவு என மாற்ற வேண்டும் என வடக்கு மாகாண சபையில் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கொண்டு வந்த பிரேரணை தீர்மானமாக நிறைவேறியது.

இந்தத் தீர்மானம் தென்னிலங்கையில் பூதாகாரமாக திரிபுபடுத்தப்பட்டு நாகதீப என்ற பெயரை மாற்ற முடியாது என வலியுறுத்தப்பட்டது. இந்நிலையிலேயே இந்த விடயம் குறித்து சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாகதீப என்ற பெயரை மாற்ற வேண்டும் எனக் கூற முடியும். ஆனால் அப்படி இடமளிக்க முடியாது. நாம் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்றே விரும்புகிறோம். ஒரே நாட்டுக்குள் நாம் பிரிந்து இருக்க முடியாது. நாம் ஒன்றாக வாழ விரும்புகையில் சிலர் அதனைக் குழப்ப முயல்கின்றனர். வடக்கு மாகாண சபையின் தீர்மானம் முட்டாள்தனமானது என்று அந்த நேர்காணலில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts