Ad Widget

நல்லூர் ஆலயச் சூழலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு, ஆலயச் சூழலில் 500 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் 25 பாதுகாப்பு கண்காணிப்பு கமெராக்களும் பொருத்தப்பட்டுள்ளதாக யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ், தெரிவித்தார்.

நல்லூர் ஆலய மஹோற்சவம் கடந்த 8ம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில், இது குறித்து கருத்து வௌியிட்ட யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,

´நல்லூர் ஆலயத் திருவிழா 25 தினங்கள் இடம்பெறுகின்றன. இன்று இடம்பெறவுள்ள மஞ்சத் திருவிழாவில் இருந்து விஷேட நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.

இதன்படி, ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவ்வாறு வருகைதரும் பக்தர்கள் தங்க ஆபரணங்கள் அணிந்து வருகின்றனர். இதனைக் கொள்ளையிட்டுச் செல்வதற்காகவே சிலர் ஆலயத்துக்கு வருகை தருகின்றனர்´ என்றார்.

மேலும், ´இவர்களிடம் இருந்து பக்தர்களை பாதுகாப்பதற்காக 500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, 25 பாதுகாப்பு கண்காணிப்பு கமெராக்களும் ஆலய வெளிச்சூழலில் பொருத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு சந்தேகத்துக்கிடமான ஒரு கும்பல் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு இவ்வாறு குற்றச்செயல் புரியும் சிலரின் புகைப்படங்கள் பொலிஸாரிடம் உள்ளன.

எதிர்வரும் 28ம் திகதியில் இருந்து செப்டெம்பர் 3ம் திகதி வரையில் ஆலயச் சூழலில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டிருக்கும்´ என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts