Ad Widget

நடிகர் சங்க தேர்தலில் மோதும் நடிகர்- நடிகைகள்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போதைய நிர்வாகிகள் பதவிகாலம் முடிவடைந்ததை தொடர்ந்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய அடுத்த மாதம் (அக்டோபர்) 18-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த 2009 மற்றும் 2012-ம் ஆண்டு தேர்தல்களில் சரத்குமார் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

vishal-sarath-kumar

பொதுச்செயலாளராக ராதாரவி பதவி வகித்தார். இந்த தேர்தலில் விஷால் தலைமையில் இன்னொரு அணி களத்தில் குதித்துள்ளது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது. இரு அணியினரும் ஆதரவு திரட்டும் பணியில் கடந்த ஒருமாதமாக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட தகுதி உள்ளவர்களாக 3,139 உறுப்பினர்கள் உள்ளனர்.

இதில், அதிகம்பேர் இசை நாடக நடிகர்கள். இவர்கள் மேடையில் பாட்டுப்பாடி நடிக்ககூடியவர்கள். மதுரை, சேலம், திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல் பகுதிகளில் அதிகம் வசிக்கின்றனர். கரூர், காரைக்குடி, திண்டுக்கல் பகுதிகளிலும் நாடக நடிகர்கள் பரவலாக காணப்படுகின்றனர். சினிமா நடிகர்களைவிட, நாடக நடிகர்கள்தான் வெற்றி- தோல்வியை தீர்மானிப்பவர்களாக இருக்கின்றனர். எனவேதான், தேர்தலில் போட்டியிடுபவர்கள் இவர்களை குறிவைக்கிறார்கள்.

ஏற்கனவே இரு அணியினரும் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர். இரண்டாவது கட்டமாக மீண்டும் இந்தப்பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இன்னொரு புறம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வும் விறுவிறுப்பாக நடக்கிறது. சரத்குமார் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். அவரது அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி நிற்கிறார். பொருளாளர் பதவிக்கு சிம்பு நிறுத்தப்படுவார் என்று பேச்சு அடிபடுகிறது.

இந்த பதவியில் முன்பு வாகை சந்திரசேகர் இருந்தார். இவர்கள் அணியில் இரண்டு துணைத்தலைவர்கள் பதவிக்கு விஜயகுமார், மற்றும் மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மகன் எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தியாகு, குண்டு கல்யாணம், குயிலி, நளினி, ஜெயமணி ஆகியோரும் முக்கிய பதவிகளுக்கு போட்டியிடுகிறார்கள்.

விஷால் அணியில் தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகிறார். பொதுச்செயலாளராக விஷால் நிற்கிறார். பொருளாளர் பதவிக்கு பொன்வண்ணன், அல்லது கருணாஸ் நிறுத்தப்படுவார் என தெரிகிறது. கார்த்தி துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவர்கள் அணி சார்பில் நடிகை குஷ்புவையும் முக்கிய பதவிக்கு போட்டியிட வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

Related Posts