Ad Widget

நகைக்கடை உரிமையாளரை அச்சுறுத்தி பணத்தைப் பெற பொலிஸார் முயற்சி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

யாழ்ப்பாணத்திலுள்ள நகைக் கடை உரிமையாளர் ஒருவரை அச்சுறுத்தி பெருந் தொகைப் பணத்தை பெற்றுக் கொள்ள பொலிஸார் முயற்சித்த சம்பவமொன்று யாழ் நகரில் இடம்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் யாழ் நகரின் கஸ் தூரியார் வீதியிலுள்ள நகைக் கடையொன்றின் உரிமையாளருக்கு கடந்த சில தினங்களாக இடம் பெற்று வருவதாக அக்கடையின் உரிமையாளர் மனவருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.யாழ் நகரிலுள்ள நகைக் கடையொன்றின் உரிமையாளரின் வீடு யாழ் நகரை அண்மித்துள்ள பிறவுண் வீதியில் அமைந்துள்ளது.

இந்நிலையில் மேற்படி வீட்டிற்கு கடந்த 9 ஆம் திகதி இரவு எட்டு மணியளவில் நெடுங்கேணிப் பொலிஸார் என்று கூறியவர்கள் சென்றுள்ளனர்.இதன்போது திருட்டுச் சம்பவம் ஒன்று டன் தொடர்புடையதாகவும் இது தொடர்பில் விசாரிக்க வேண்டியிருப்பதாகவும் கூறி அக்கடையின் உரிமையாளரான சரவணமுத்து மோகனதாஸ் வயது (66) என்ற வயோதிபரை (LG 9591) என்ற இலக்க பொலிஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் ஏதும் அறியாமல் வீட்டுக்காரர்கள் அவதிப்பட்டிருந்தனர். இவ் வேளையில் மறுநாள் காலை 7.45 மணியளவில் நெடுங்கேணிப் பொலிஸ் தொலைபேசி இலக்கமான 0242053008 என்ற இலக்கத்திலிருந்து வீட்டுக்காரருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

களவு போனதாகக் கூறப்படுகின்ற பவுண் 8 அல்ல 11 என்றும் அதனைக் கொண்டு வந்தால் அப்பாவை விடுதலை செய்ய முடியு மென்றும் மகனிடம் பொலிஸார் தெரிவித்துள்ள அதேவேளையில் அப்பாவையும் மகனையும் பேசவும் வைத்துள்ளனர்.

இதற்குப் பின்னர் 10 ஆம் திகதி வர்த்தக சங்கத்திற்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய வர்த்தக சங்கப் பிரதிநிதியுடன் யாழ் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கும் காலை 9 மணிக்கே பொலிஸ் நிலையம் சென்றிருந்தனர். ஆயினும் வாயிற் கடவையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அத்தியட்சகரை சந்திக்க விடாது தடுத்துள்ளனர்.

இதன் பின்னராக பிற்பகல் 1 மணியளவில் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்திற்குச் சென்று சம்பவம் தொடர்பாக முறையிட்டதனையடுத்து உடனடியாக நெடுங்கேணிப் பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்ட ஆணைக்குழுவினர் சம்பவம் தொடர்பில் பொலிஸாரைக் கேட்டுள்ளனர்.

எனினும் தாம் குறித்த கடை உரிமையாளரைக் கைது செய்யவில்லை என உடனடியாகவே நெடுங்கேணி பொலிஸார் மறுத்துள்ளனர். இந்நிலையில் மேற்படி நகைக் கடை உரிமையாளரை பொலிஸார் கைது செய்ததற்கான சான்றுகளும் சாட்சியங் களும் தம்மிடம் இருப்பதாக ஆணைக்குழுவினர் கூறியதனையடுத்து கைது செய்ததை பொலிஸார் ஒப்புக்கொண்டனர்.

தொடர்ந்து நெடுங்கேணிப் பொலிஸ் பிரிவில் இச் சம்பவம் தொடர்பு பட்டிருப்பதால் இதனை வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் முறையிடுமாறு யாழ் பிராந்திய அலுவலகத்தினர் அறிவுறுத்தியதற்கமைய வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு மதியம் 1.30 மணியளவில் தெரியப்படுத்தப்பட்டது.

சம்பவம் தொடர்பில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் நெடுங்கேணிப் பொலிஸாருக்கு தொலைபேசியூடாக தொட ர்பு கொண்டு சம்பவம் தொடர்பில் கேட்ட போதும் அவ்வாறு யாரையும் கைது செய்ய வில்லை என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

ஆனால் அன்றையதினமே பிற்பகல் 2.30 மணியளவில் வவுனியா நீதிமன்றில் தந்தையாரை ஆஜர்படுத்தப்படுமென்று பொலிஸார் மகனுக்கு கூறியுள்ளனர். ஆனால் அங்கு நீண்ட நேரமாகக் காத்து நின்ற போதும் அவ்வாறு நீதிமன்றுக்கு அழைத்து வரப்படவில்லை.

இந்நிலையில் வவுனியாவிலிருந்து இரவு 11 மணியளவில் யாழிலுள்ள வீட்டிற்கு மகனார் மீண்டும் திரும்பினார். இதன் பின்னர் மறுநாள் காலையிலும் வவுனியா நீதிமன்றுக்கு மகனார் சென்றுள்ளார். இதன் போதும் தகப்பனார் அழைத்து வரப்படவில்லை. இதனையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி மகனார் சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு முறையிடப் போவதாக தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து அன்றையதினம் அதா வது 11 ஆம் திகதி பிற்பகல்2.30 மணியள வில் நீதிமன்றுக்கு பொலிஸார் தகப்பனாரை கொண்டு வந்தனர். இதன்போது விசாரணை மேற்கொண்ட நீதவான் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கு மாறும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அவரை கடந்த வருடம் இடம் பெற்ற களவு சம்பவத்துடன் பொலிஸார் தொடர்பை ஏற்படுத்தியிருக்கின்றனர். ஆனால் கடந்த வருடமோ அல்லது இந்த வருட ஆரம்பத்திலேயோ இச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் எந்தவித அறிவுறுத்தலையும் தமக்கு விடுக்கவில்லை என்றும் உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.

திடீரென எம்மீது பொய்யான குற்றச் சாட்டை சுமத்தியிருக்கின்ற பொலிஸார் காசு மற்றும் நகை கொடுக்கவில்லை என்பதற்காகவா இவ்வாறு செயற்பட்டிருக்கின்றனர் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குடும்பத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related Posts