Ad Widget

நகைகளை அபகரித்த போலி மருத்துவத் தாதி

சிகிச்சைக்காக பெண்ணொருவரை அழைத்துச் சென்ற போலி மருத்துவத்தாதி ஒருவர், அப்பெண்ணின் நகைகளை அபகரித்துச் சென்ற சம்பவமொன்று யாழ்.திருநெல்வேலி பத்திரகாளி கோவிலடியில் நேற்று திங்கட்கிழமை (18) இடம்பெற்றுள்ளதாகக் கோப்பாய் பொலிஸார் இன்று தெரிவித்தார்.

மேற்படி பகுதியில் வசிக்கும் பெண்மணியொருவர் திருமணமாகி 5 வருடங்கள் கடந்த நிலையிலும் குழந்தைப் பேறு கிடைக்கவில்லை. இந்நிலையில் இவர்களின் வீட்டிற்கு வந்த இளம்பெண் ஒருவர், தான் குழந்தை விருத்தி நிலையத்தில் மருத்துவத் தாதியாகக் பணியாற்றுவதாகவும் இது தொடர்பில் சிறப்புத் தேர்ச்சி மிக்க வைத்தியர் இருக்கின்றார். அவரிடம் உங்களுக்கு அனுமதி எடுத்துத் தருகின்றேன் எனக்கூறியுள்ளார்.

தொடர்ந்து, திங்கட்கிழமை (18) வீட்டிற்கு வந்த மேற்படி பெண், குறித்த வைத்தியர் பரமேஸ்வராச் சந்தியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு வருவார் என்றும் சிகிச்சை பெறுவதற்கு வரும்படி வீட்டிலிருந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார்.

வைத்தியசாலைக்குச் சென்றதும், மேற்படி வைத்தியரிடம் சிகிச்சை பெறும் போது நகைகள் அணியக்கூடாது எனக்கூறி, சிகிச்சைக்கு வந்த பெண் அணிந்திருந்த சங்கிலி மற்றும் காப்புக்களை வாங்கியுள்ளார்.

தொடர்ந்து, பெண்ணின் திருநெல்வேலியில் அமைந்துள்ள வீட்டிற்குச் சென்று, வீட்டில் இருந்தவர்களிடம், சிகிச்சைக்குச் சென்றவர் தாலிக் கொடியை மறந்துவிட்டுச் சென்றுவிட்டதாகவும், அதனைத் தரும்படியும் கேட்டு வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.

வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இருந்த பெண், நீண்ட நேரமாகியும் வைத்தியர் வருகை தராதமையால், வைத்தியசாலை நிர்வாகத்திடம் மேற்படி வைத்தியர் எப்போது வருவார் எனக் கேட்டுள்ளார். எனினும், நிர்வாகம் அவ்வாறான வைத்தியர் இங்கு வருவதில்லையென வைத்தியசாலை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, மேற்படி பெண், வீட்டுக்கு திரும்பிய போதே மருத்துவதாதி போல வேடமிட்ட பெண் தன்னை ஏமாற்றியமை தெரியவந்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தனது 15 பவுண்கள் நகைகள் இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts