Ad Widget

த.தே.கூ உறுப்பினர்களில் மேலும் ஐவருக்கு அழைப்பு

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 உறுப்பினர்களிடம் புதன்கிழமை (24) விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அக்கட்சியின் மேலும் ஐந்து பேரை, எதிர்வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதி விசாரணைக்காக பொலிஸ் நிலையம் வருமாறு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ். பொலிஸாரின் அழைப்பின் பேரில், வடமாகாண சபை உறுப்பினர்களான பாலச்சந்திரன் கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம், காரைநகர் பிரதேச சபை தவிசாளர் வே.ஆனைமுகன் ஆகியோரிடம் கடந்த புதன்கிழமை விசாரணை நடத்தப்பட்ட நிலையிலேயே ஏனைய ஐவருக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தவேண்டி இருப்பதாக, வடமாகாண சபை உறுப்பினர்களான கந்தையா சர்வேஸ்வரன், சந்திரலிங்கம் சுகிர்தன், இமானுவல் ஆர்னோல்ட், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோரையே ஜனவரி 12ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை அறிக்கை, ஜனவரி மாதம் 16ஆம் திகதி, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 16ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் இரு கட்சி உறுப்பினர்களும் காயமடைந்தனர். தமது உறுப்பினர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தாக்கி காயம் ஏற்படுத்தியதாகக்கூறி ஈ.பி.டி.பி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தது. அந்த முறைப்பாட்டின் பிரகாரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை விசாரணைக்கு வருமாறு பொலிஸார் அழைத்துள்ளனர்.

Related Posts