Ad Widget

த.தே.கூ., இ.த.கவை கலைத்துவிடவும்: த.வி.கூ

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசு கட்சியும் மிகக்கௌரவமான முறையில் தம் ஸ்தாபனங்களை கலைத்து விட்டு தங்களுடைய உறுப்பினர்களையும் தமிழர் விடுதலை கூட்டணியுடன் இணையுமாறு கூறுவதே சரியானதாகும். அதற்காக தமிழர் விடுதலை கூட்டணியின் கதவுகள் திறந்தே இருக்கும் என்று கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

anantha-sankaree

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உரோமாபுரி பற்றி எரியும் போது நீரோ மன்னன் வீணை வாசித்துக்கொண்டிருந்தான் என்ற பழமொழிக்கு ஒப்ப தமிழ் தேசியகூட்டமைப்பும் இலங்கை தமிழரசுகட்சியும் செயற்பட முனைவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாடாளுமன்ற அரசியலிலிருந்து ஒதுங்கப்போவதாக என்னால் விடப்பட்ட அறிக்கை வருத்தத்துக்குரிய வகையில் சில பகுதியினரால் தவறாக விளக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மட்டும் கலந்து கொள்ளமாட்டேன் என்று தெளிவாக கூறியிருந்தேன்.

அந்த முடிவுக்குரிய விளக்கம் தரவேண்டிய கடமை எனக்கு உண்டு.

கசப்புணர்வு

2004ஆம் ஆண்டு தொடக்கம் நடைபெற்று வரும் நாடாளுமன்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் எனக்கு ஏற்பட்ட கசப்புணர்வே இதற்கு முக்கியமான காரணமாகும்.

சில தலைவர்களின் கழுத்தறுப்பு நடவடிக்கைகளும் அரசியல் கத்துகுட்டிகள் சிலரின் நடவடிக்கைகளும என்னால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.

அவர்களது அறிக்கைகளும் சுயலாபம் உடையவைகளாக இருப்பதால் தீர்வு இலக்கை இலகுவாக அடையமுடியாத நிலையை உருவாக்கியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் வேறு பதவிகளையும் அடைந்த பெரும் மகிழ்ச்சியில் இருந்து விடுபடமுடியாத அவர்கள் தமது எதிர்கால பதவிகளை தக்க வைப்பதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளனர்.

இன ஒற்றுமை ஏற்படுத்துவதற்கு முரணான சிலரின் நடவடிக்கைகள் அதிர்ச்சியோடு கூடிய ஏமாற்றத்தைத்தருகிறது.

குறிப்பாக வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல்வாதிகளும் அரசியலும் மிக கீழ்மட்டத்தை அடைந்துள்ளமையால் எந்தவிடயத்திலும் எந்த முறையிலும் ஜனநாயக கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை.

எஞ்சிய பணத்தை கையளிப்பது வழக்கம்

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கென புலம்பெயர்ந்தவர்களால் சேகரிக்கப்படும் பெருந்தொகைப்பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறுபட்ட தேவைகள் இருக்கின்றபோதும் அவர்களின் வாக்குகளை விலைகொடுத்துவாங்குவதற்காக பெருந்தொகையான பணம் தேர்தல் மாவட்டங்களுக்குள் இறைக்கப்படுகின்றன.

ஆனால், எமது அனுபவரீதியாக கடந்த காலத்தில் வாக்காளர்களே தம் செலவில் தேர்தல் பிரசாரம் செய்து முடிந்ததன் பின் எஞ்சிய பணத்தை எம்மிடம் கையளிப்பது வழக்கமாக இருந்தது.

சண்டித்தனம் மிரட்டல் பொய்ப்பிரச்சாரம் மிகப்பண்பற்ற முறையில் மனிதனின் பொறுமையின் எல்லைக்கு அப்பால் எங்கும் காணப்படுகின்றது.

தப்பான முறையில் உபயோகிக்கப்படும் கணினி தொழில்நுட்பம் தமிழ் சமூகத்துக்கு பெரும்சாபக்கேடாக அமைந்திருக்கின்றது. அரசியல் தலைமைகள் அதனை நிறுத்தவேண்டும் என்பதை உணரவில்லை.

தமிழர் விடுதலை கூட்டணியை அதன் முன்னைய உச்சநிலைக்கு கொண்டுவர என்னிடமிருக்கும் முழுநேரத்தையும் உழைப்பையும் உபயோகிப்பேன்.

வெளிப்படுத்த வேண்டும்

தமிழர் விடுதலைக் கூட்டணி இராணி அப்புக்காத்து என கௌரவிக்கப்பட்ட அமரர் சா. ஜே வே. செல்வநாயகத்தினால் தமிழர்களுக்காக விட்டுச்செல்லப்பட்ட பெரும்சொத்து. தமிழரசு கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியபதங்களை இப்போது எவர் பாவிக்கின்றார்களோ அவர்கள் அவற்றின் உண்மை அடையாளங்களை வெளிப்படுத்த வேண்டும்.

எனது அபிப்பிராயப்படி, அபிப்பிராயம் மட்டுமல்ல உண்மையும் கூட.

இவ்விரு அமைப்புக்களும் எதுவித அதிகாரங்களுமின்றி மோசடி மூலம் ஆரம்பிக்கப்பட்டவையாக இருப்பதால் இவ்விரு அமைப்புக்களும் இயங்க அருகதை அற்றவையாகும்.

ஒரு கட்சியாகும்

மதிப்புக்குரிய கௌரவ ஜி.ஜி பொன்னம்பலம், கௌரவ சா.ஜே.வே. செல்வநாயகம் ஆகிய இருவராலும் 1945ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து 1949ஆம் ஆண்டுபிரிந்து சென்று கௌர வ சா.ஜே.வே.செல்வநாயகத்தால் உருவாக்கப்பட்டதே தமிழரசுகட்சியாகும்.

சமஷ்டிக்கட்சி என்றும் அழைக்கப்படும். இக்கட்சி மகாத்மாகாந்தி அடிகளின் அகிம்சைக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு தன் வாழ் நாள் பூராகவும் அக்கொள்கையின் அடிப்படையில் வாழ்ந்த அவரால் வழிநடத்தப்பட்ட ஒரு கட்சியாகும்.

தமிழர் ஐக்கிய முன்னணியாக உருவாகி தமிழர் விடுதலை கூட்டணியாக பெயர் மாற்றம் பெற்று பெரும்மதிப்புக்குரிய அமரர் சா.ஜே.வே செல்வநாயகத்தின் முயற்சியால் 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு பல அரசியல் தலைவர்கள் கல்விமான்கள் பிரபல வழக்கறிஞர்கள், அரசஊழியர்கள், மதிப்புக்குரிய பெரியார்கள், இளைஞர்கள், நாட்டின் பல பகுதிகளிலும் வாழ்ந்த பலதுறைசார்ந்த மக்கள் இம் முயற்சிக்கு முழு ஆதரவையும் கொடுத்திருந்தனர்.

பல்வேறு நோக்கங்களில் ஒன்றாகிய தமிழ் பேசும் பலவேறு சிறுபான்மை மக்களையும் ஒரு கொடிக்கு கீழ்கொண்டு வருதல் பிரதான நோக்கமாக இருந்தது.

நீக்கப்பட்டிருந்தன

இது சோல்பரி பிரபுவின் அரசியல் சாசனத்துடன் உருவான சுதந்திர இலங்கையில் 1972ஆம் ஆண்டு குடியரசு அரசியல் சாசனம் அமுல் படுத்தப்பட்ட வேளை பழைய சாசனத்திலிருந்த சிறுபான்மை இனத்துக்கு சாதகமான பாதுகாப்புக்கள் நியாயமற்ற முறையில் நீக்கப்பட்டிருந்தன.

அன்றைய அத்தியாவசிய தேவையை உணர்ந்து தனது ஒரு காலத்து சகபாடியாக இருந்த ஜி.ஜி பொன்னம்பலத்திடம் இருந்த 23 ஆண்டுகால அரசியல் பகைமையை புறந்தள்ளிவிட்டு அவரின் வீடுசென்று நமக்கு புதிய மாற்றத்தினால் ஏற்பட்டிருக்கின்ற சவாலை எதிர்கொள்ள உதவுமாறு அழைப்புவிடுத்தார்.

உறுதியளித்தார்

பாராட்டத்தக்க வகையில் எதுவித தயக்கமுமின்றி மிக்க மரியாதையுடன் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரின் முயற்சிக்கு முழு ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார்.

தமிழ் மக்களை பொறுத்தவரை இத்தலைவர்களின் மீள்இணைவு இரு பெரும் தமிழ் அரசியல் இராட்சதர்களின் இணைப்பாக கருதப்பட்டது.

தமது விரோதங்களை ஒருபுறம் தள்ளிவிட்டு பொதுநோக்கோடு மீண்டும் இணைந்த இவ்விரு தலைவர்களின் பெருந்தன்மையையிட்டு தமிழ் சமூகம் பெருமகிழ்ச்சி அடைந்தது. நாடு முழுவதும் இயங்கி வந்த தமிழரசுகட்சி தமிழ் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் கிளைகள் பல்வேறு பகுதிகளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணிக் கிளைகளாக இணைக்கப்பட்டன.

மேலும் தமிழ் காங்கிரஸ் கட்சியின் உபதலைவரும் முன்நாள் செனட்சபை உறுப்பினரும் கனக்கீஸ்வரனின் தந்தையாரும் பிரபல வழக்குரைஞருமாகிய கௌரவ எஸ்.ஆர்கனகநாயகம், தமிழ் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் வழக்கறிஞர் தா.சங்கரப்பிள்ளைடி இணை பொருளாளர்கள் வழக்கறிஞர் ஆர்.செல்வராசா பின்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தா.திருநாவுகரசு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சிவசிதம்பரம் தா.சிவசிதம்பரம் ஆகியோரும் யாழ்ப்பாணமேயரும் பிரபல வழக்கறிஞருமான இராசாவிசுவநாதன் யாழ்.மாவட்ட சபைதலைவர் சு.நடராசா தமிழ்த் தலைவர்களின் ஒற்றுமைக்காக முன்னின்று உழைத்த அரச அதிகாரி என்.ஞானமூர்த்தி இதுபோன்ற இன்னும் பலர் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினர்.

உலகறியச் செய்தது

தமிழரசு கட்சியின் செயலாளராக நீண்டகாலமாக இருந்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக செயலாற்றிய அ. அமிர்தலிங்கம் அன்னாரின் துணைவியார் மங்கயற்கரசி ஆகியோரின் பங்களிப்பும் செயலும் சொல்லிலடங்காது.

ஆனால், மிக வேதனைக்குரியது என்னவெனில் அவர் தமிழரசுகட்சியின் ஆரம்பகால உறுப்பினராக இருந்தும் அவரை அனேகர் மறந்துவிட்டனர்.

நானும் தமிழர் விடுதலை கூட்டணியின் ஆரம்பகால உறுப்பினர் ஆவேன். மேலும் தமிழர் விடுதலைக் கூட்டணிதலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி பொன்னம்பலம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் எஸ். தொண்டமான் அவர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணி மகாநாட்டில் செல்வநாயகத்துடன் கட்சி தலைமையை பங்கிட தெரிவானார்கள்.

தமிழர் விடுதலை கூட்டணியை பலப்படுத்த எடுத்த நடவடிக்கைகளில் இது ஒன்றாகும்.

இத்தகைய ஒரு பலமான அடித்தளத்திலேயே தமிழர் விடுதலை கூட்டணி தமிழர்களுக்கு நிரந்தரமாக சேவையாற்ற உருவாக்கப்பட்டதேயன்றி கண்டவர்களும் கையாள்வதற்கு அல்ல.

1977ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் தொகுதிகளில் 500 வாக்குகளால் ஒரு ஸ்தானத்தை மட்டும் இழந்து. ஏனைய அத்தனைக்குமான தொகுதிகளையும் வென்றுமக்களால் தமிழர் விடுதலை கூட்டணி ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதனை உலகறியச் செய்தது.

1972 புதிய அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்ட போது தமிழர் விடுதலைக் கூட்டணி தனது பலத்தை வலுப்படுத்தும் நோக்குடன் கட்சிக்குள் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களுக்கு புதிய ஆணை பெறும் நோக்கோடு ஒரு தேர்தலை எதிர் நோக்க விரும்பியது.

விரைவில் ஒரு பொதுத்தேர்தல் நடைபெறும் சாத்தியக்கூறு இன்மையால் நாடாளுமன்றத்தில் ஒரு ஸ்தானத்தை காலியாக்கி உப தேர்தலில் போட்டியிட்டு அடையும் வெற்றியை மக்கள் கொடுத்த அடையாள ஆணையாக கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது.

கௌரவ சா ஜே.வே. செல்வநாயகமே கட்சியில் தலைவராக அவ்வேளை இருந்தமையால் தானே தனது காங்கேசன்துறைத் தொகுதியின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து உப-தேர்தலில் போட்டியிடுவதாக முடிவெடுத்து அரசின் பலத்த எதிர்ப்புடன் உப-தேர்தலில் வெற்றிபெற்றார்.

அந்த நேரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி பதிவு செய்யப்பட்டிருக்காத காரணத்தால் தமிழரசு கட்சியின் வீட்டுச்சின்னத்தில் போட்டியிட நேர்ந்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சா.ஜே. வே செல்வநாயகம் அமரத்துவம் அடைவதற்கிடையில் தமிழரசு கட்சியினுடைய சின்னமான வீட்டு சின்னம் இந்த ஒரேயொரு தடவை மட்டுமே உபயோகிக்கப்பட்டது.

அதே போன்று தமிழரசு கட்சியின் வெள்ளிவிழா கொண்டாட்டத்துக்காக தமிழரசு கட்சி என்றபதமும் ஒரேயொரு தடவை மட்டுமே உபயோகிக்கப்பட்டது.

இந்த விழாவில் மதிப்புக்குரிய பெருமக்களுக்கு வழங்கப்படும் மூதறிஞர் என்ற கௌரவ பட்டத்தை செல்வநாயகம் அவர்களுக்கு கௌரவ முன்னாள் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் எஸ். தொண்டமான் வழங்க அன்னாரை அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் நான் பொன்னாடை போர்த்தி கௌரவித்தேன்.

இவ்விருசந்தர்ப்பங்களும் தவிர தமிழர் விடுதலைக் கூட்டணி 1972 இல் ஆரம்பித்த நாள் தொட்டு தந்தை செல்வா அமரத்துவம் அடைந்த நாள் வரை (26.04.1977) தமிழரசு கட்சி என்றபதமோ அதன் வீட்டு சின்னமோ எச்சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தப்படவில்லை.

ஒரு கிறிஸ்தவராக இருந்தும் அவரின் விருப்பத்திற்கமைய தகன கிரியைக்காக உதய சூரியன் கொடியால் போர்க்கப்பட்டு அன்னாரின் பூதவுடல் யாழ். முற்றவெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மேலும் நன்றியுள்ள மக்களால் அன்னாரின் ஞாபகார்த்தமாக உச்சத்தில் உதய சூரியன் பதிக்கப்பட்ட 80 அடித்தூண் அவர் தகனக்கிரியை செய்யப்பட்ட அதே இடத்தில் இராச கம்பீரமாக நிமிர்ந்து நிற்பது மட்டுமல்ல உலகம் அழியும் வரை தொடர்ந்து நிற்கும்.

இத்தூணுக்கு அருகாமையில் அவரின் அஸ்தியை சுமந்து ஒரு கல்லறையும் அமைந்துள்ளது. இத்தகைய ஒரு பெரிய மனிதனின் வரலாற்றில் பெரும் பகுதி மறைக்கப்பட்டும் திரிபுபடுத்தப்பட்டும் இருப்பதால் அன்னாரால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் தமிழரசு கட்சிக்கும் என்ன நடந்தது என்பதை உலகறிய செய்ய வேண்டிய புனிதமான கடமை எனக்கு உண்டு.

இத்தால் பொது மக்களிற்கும் மற்றும் சம்மந்தப்பட்டவர்களுக்கும் அவர் உருவாக்கிய தமிழர் விடுதலைக்கூட்டணி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவர் மரணித்து தமிழர் விடுதலைக் கூட்டணிதலைவராக தகனகிரியை செய்யப்பட்டு அவர் நினைவாக ஒரு தூபியும் எழுப்பப்பட்டு 26 ஆண்டுகளின் பின் தனிப்பட்ட நபர் ஒருவர் தமிழரசு கட்சியை புணரமைப்பு செய்துள்ளார்.

எத்தகைய மோசடி மூலம் இது புணரமைக்கப்பட்டது என்பதை ஒரு செய்தி விளக்கியது. தமிழரசு கட்சியை புணரமைக்கும் பணியில் ஈடுபட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கிளிநொச்சிக்கு 2003.10.14 அன்று விஜயம் செய்துள்ளார்.

அகிம்சைக்கு தன்னை முற்றாக அர்ப்பணித்து இறுதிவரை செயற்பட்ட ஒரு பெரும் தலைவருக்கு கொடுக்கப்படும் பெரும் கௌரவம் இதுவா என பலரும் எள்ளி நகையாடுகின்றனர். இது போன்று வேறு ஒரு மோசடிச் செயல் இக்கடிதத்தின் இரண்டாம் பகுதியில் வெளிவரும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பும் இலங்கை தமிழரசு கட்சியும் தமது உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தவேண்டும்

இக் கடிதத்தின் முதலாவது பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கும் பணியில் தமிழரசுக் கட்சியின் தலைவராகிய கௌரவ சா.ஜே.வே செல்வநாயகம் அவர்களின் பங்களிப்பு எத்தகையது என்பதை விளக்கியுள்ளேன்.

சந்தர்ப்பம் சூழ்நிலையில் கட்டாய தேவையால் அரசியல் விரோதம் காரணமாக பிரிந்திருந்த பழைய நண்பன் ஜிஜி. பொன்னம்பலம் அவர்களையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் தொண்டமான் அவர்களையும், தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் பதவியை பகிர்ந்து அளித்ததன் மூலம்தான் உருவாக்கிய கட்சியாகிய தமிழரசு கட்சியை புனரமைப்பு செய்யும் உத்தேசம் இல்லை என்பதனை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால், மோசடி மூலமாக புனரமைக்கப்பட்ட இலங்கை தமிழரசு கட்சி எமது அப்பாவி தமிழ்மக்களை உலகை சுற்றி காட்டுவதாக ஏமாற்றி எதுவித அவசிய தேவையும் இன்றி ஸ்தாபகரே விரும்பாத இலங்கை தமிழரசு கட்சியை புனருத்தாரணம் செய்தவரை எமதுமக்கள் கேள்வி கேட்க மிகப் பொருத்தமானகாலம் இதுவாகும். கடிதத்தின் இப் பகுதியில் மேலும் சில மோசடிகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் சில குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவையாகும் நியாயமற்ற முறையில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும், தமிழரசு கட்சிக்கும் காணொளி உட்பட கணிசமான தமிழ் ஊடகங்களும் காட்டி வந்த பெரும் ஆதரவு தமிழர் இனப்பிரச்சினை தீர்வுக்கும், குறிப்பாக யுத்த அகதிகளுக்;கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விரு ஸ்தாபனங்களுடைய உள்நோக்கம் புரியாத அப்பாவி தமிழ்மக்கள் அவர்களின் மன உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் தூண்டும் சுலோகங்களால் தூண்டப்பட்டும குடியின் ஓசையால் பாம்புகள் இயங்குவது போல் தமது தேவைகளையும், பிரச்சினைகளையும் மறந்து செயற்படுகின்றனர்.

அவர்கள் இப்போது தமது நீண்ட தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து சிந்தித்து செயற்பட முடியாத மயக்க நிலையிலிருந்து விடுபட வேண்டும்.

மக்கள் எல்லோரும் இப்போது ஒன்று சேர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தமிழரசுக் கட்சியையும் அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் என்று, அல்லது அதற்கு பதிலாக மிக முதிர்ந்த அனுபவமுற்ற நேர்மையாகவும், நம்பிக்கையாகவும் செயற்பட்ட கடந்த கால தலைவர்கள் காட்டிய வழியை பின்பற்ற வற்புறுத்த வேண்டும்.

கௌரவ சா.ஜே. வேசெல்வநாயகம் அவர்கள் அத்தகைய ஒரு தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியை தமிழ் மக்களுக்;காக விட்டுச் சென்றவரும் ஆவார்.

இவ்விரு தமிழ்த் தலைவர்கள் நாட்டின் பல்வேறு மக்களால் சிங்களவர் தமிழர் இஸ்லாமியர் என்ற வேறுபாடின்றி மதிப்பளிக்கப்படுகின்றவர்கள்.

மிக விஷேடமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில் பெரியவர் செல்வநாயகம் அகிம்சைக்கே கட்டுப்பட்டவராகையால் அவரை வன்முறையுடன் இணைப்பது மிகப் பெரும் குற்றமாகும்.

இதன் காரணமாகத்தான் அவர் பெருமளவு மதிக்கப்பட்டு ஈழத்து காந்தி என அழைக்கப்பட்டார். ( ஈழம் என்பது இலங்கையை குறிக்கும்). இப் பெரியாரின் பெயர் சிலரின் சுயநலத்திற்காகவும் சுயவருமானத்துக்காகவும் செலவழிக்கப்படுவது மிக துரதிஷ்டவசமானதாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழரசு கட்சியும் மிகக்கௌரவமான முறையில் தம் தாபனங்களை கலைத்து விட்டு தங்களுடைய உறுப்பினர்களையும் தமிழர் விடுதலை கூட்டணியுடன் இணையுமாறு கூறுவதே சரியானதாகும். அதற்காக தமிழர் விடுதலை கூட்டணியின் கதவுகள் திறந்தே இருக்கும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழரசுகட்சி ஆகியவற்றின் மிகப்பெரிய மோசடி என்னவெனில், தமிழ் தேசிய கூட்டமைப்பு முதன் முதலாக 22.10.2001இல் தமிழர் விடுதலை கூட்டணி உட்பட நான்கு கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டதாகும். இலங்கை தமிழரசு கட்சி இந்த புரிந்துணர்வு உடன்பாட்டில் இல்லை.

ஏனெனில், அந்த கட்சியை உருவாக்கியவர் காலத்திலேயே அது செயலிழந்து, மேலும் 26 ஆண்டுகள் செயலற்று இருந்தமையாகும். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வாக்குகளை பெருமளவு சேகரிக்கக்கூடிய செல்வாக்கு பெற்றிருந்தமையால் 2004ஆம் ஆண்டு தேர்தலில் மக்களை ஏமாற்றிவாக்குகளை பெறுவதற்காக தாராளமாக உபயோகிக்கப்பட்டதாகும். தமிழ்தேசிய கூட்டமைப்பும், தமிழரசு கட்சியும் தன்னிச்சையாக புணரமைக்கப்பட்டவையாகும்.

அதே போல தமிழர் விடுதலைகூட்டணியையும் தன்னிச்சையாக தமிழ் தேசியகூட்டமைப்பிலிருந்தும் விடுவிக்கப்பட்டது. இச் செயல் விடுதலைப்புலிகள் தம்வேட்பாளர்களை தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் புகுத்த உதவியது.

தமிழ்ச் செல்வன் எச்சந்தர்ப்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பாரமெடுத்தார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், அக்காலத்தில் வெளியாகிய சில பத்திரிகைகளின் படி தமிழ்ச் செல்வனின் வருகைக்காக வன்னியில் காத்திருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பினர் அவரின் வருகை தாமதம் ஆகியதால் மேலும் ஒருநாள் அங்கு காத்திருக்க வேண்டி இருந்தது என செய்தி வெளியிட்டிருந்தது.

தமிழ்ச்செல்வன் அவர்கள் யாழ். மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு ஆறு இடங்களை கொடுத்து அவற்றை பங்கிடுமாறு கூறிவிட்டு தமது வேட்பாளர்களுக்கென ஆறு இடங்களை வைத்துக்கொண்டார். இதே முறையை வடமாகாணம் பூராகவும் உள்ள தேர்தல் மாவட்டங்களிலும் கையாண்டனர்.

இப்படி பலவகையான குழறுபடிகளை ஏற்படுத்தினாலும் திருகிங்ஸ்லி இராசநாயகம் அவர்களின் நிலைமிகத் தெளிவானது. 2004ஆம் ஆண்டுதேர்தலில் மட்டக்களப்பு தொகுதியில் இவர் வெற்றி பெற்றிருந்தார்.

அவரின் சகபாடியாகிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் திரு இராசநாயகத்தை நாடாளுமன்ற செயலாளரிடம் கூட்டிச்சென்று அவரின் இராஜினாமா கடிதத்தினை கையளிக்க வைத்தார். இதனை தொடர்ந்து திரு இராசநாயகம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்.

யாரோ சிலரின் மீதுகொண்ட அச்சம் காரணமாக இவ்விடயம் இலகுவாக மறக்கப்பட்டுவிட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழரசு கட்சி ஆகிய இரு கட்சிகளின் நிர்வாக சபை உறுப்பினர்கள் சம்மந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்தை நிரப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் இக்குற்றவியல் செயல்பாடுகளிற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களாவர்.

ஆகவே என்னால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில தரவுகளை வைத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பொருத்தமான நடவடிக்கை எடுத்து இலங்கையின் நீதிநிர்வாகத்தில் மக்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தரவுகள்.

1.திரு கிங்ஸ்லி இராசநாயகம் என்பவர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியாகிய தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு பிரதிநிதியாக தெரிவானவர்

2.திரு கிங்ஸ்லி இராசநாயகம்அவர்கள் பதவியை துறக்குமாறு ஏன் கேட்கப்பட்டார்? யாரால்?

3.அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளரால் பதவிவிலகும் படி கேட்கப்படாவிட்டால் யாரால் கோரப்பட்டார்?

4. இராசநாயகம் என்பவரின் படுகொலை பற்றி அறிந்தவுடன் த.தே.கூட்டமைப்பு கௌரவ சபாநாயகரிடம் ஏன் தெரிவிக்கப்படவில்லை. வெற்றான பதவி ஏன் நிரப்பாது தடுக்கப்படவில்லை.

5.யாருடைய வேண்டுதலுக்கமைய த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு இராசநாயகம் அவர்களை நாடாளுமன்ற செயலாளர்நாயகம் அவர்களிடம் அழைத்து சென்றார்

6.இராசநாயகம் படுகொலை செய்யப்பட்ட வேளை இவர்கள் எடுத்த நடவடிக்கை தான் என்ன?

7.எவராகிலும் ஒருவர் இது விடயமாக ஏதும் நடவடிக்கை எடுத்தார்களா?

8. சட்டம் இடங்கொடுத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்மந்தப்பட்ட உறுப்பினர்கள் இப்பிரச்சினை தீரும்வரை சபை நடவடிக்கைகளினின்றும் இடை நிறுத்தமுடியும்

9.நாடாளுமன்றம் ஒரு உப குழுவை நியமித்து விசாரணை செய்து சட்ட நடவடிக்கைக்காக சிபாரி;சு வழங்கலாம்

10. தேர்தல் ஆணையாளர் தமிழ்தேசிய கூட்டமைப்பு, தமிழரசுகட்சி ஆகியவற்றின் மீது விசாரணை செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட சில முக்கிய பிரமுகர்களிடம் அமரர் கிங்ஸ்லி இராசநாயகம் அவர்களின் படுகொலை சம்மந்தமான தகவல்கள் இருக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதால் உரிய அதிகாரிகளால் முறைப்படி விசாரரணை முடக்கிவிடும் பட்சத்தில் வேறும் சில படுகொலைகள் பற்றிய விபரங்கள் துலங்க வாய்ப்புண்டு என தமிழர் விடுதலைக் கூட்டணி கருதுவதாலேயே இவ்வறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

Related Posts