Ad Widget

தௌஹீத் ஜமாத் அமைப்புக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் மோதல்: 5 பேர் அதிரடியாக கைது

மாத்தளையில் பயங்கரவாத அமைப்பான தௌஹீத் ஜமாத் அமைப்புக்கும் அந்தப் பகுதி முஸ்லிம் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) வரகாமுர பிரதேசத்திலுள்ள தௌஹீத் ஜமாத் அமைப்பின் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் தௌஹீத் ஜமாத் அமைப்பின் மாத்தளை அமைப்பாளர்களாக கருதுப்படும் நபர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் அங்கு ஒன்று கூடியுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து மத தலைவர்களின் ஆலோசனைக்கிணங்க பெண்களுக்கான தொழுகைகள் தவிர்க்கப்பட்டு வருகின்றன. எனினும் நேற்றிரவு குறித்த அமைப்பினர் பெண்களுக்கான தொழுகையை ஏற்பாடு செய்யும்போது அந்த பகுதி முஸ்லிம் மக்கள் அதனை தவிர்க்குமாறு கேட்டுள்ளனர்.

இதன் காரணமாக இருதரப்புக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியிருந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இரண்டு தரப்பினரையும் அங்கிருந்து அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் அப் பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இதனை அடுத்தே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Posts