Ad Widget

தோப்புக்கரணம் போடவைத்த பொலிஸாரின் வேலை பறிபோனது!!

ஊரடங்கு சட்டத்தை மீறி பாதையில் பயணித்த நால்வரை தோப்புக்கரணம் போடவைத்து தண்டித்த இரு போக்குவரத்து பொலிஸார் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்றுமுதல் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டு, ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு நகர போக்குவரத்து பிரிவு மற்றும் அவசர அழைப்புப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் உத்தர்வின் பேரில், நகர போக்குவரத்து பிரிவின் பொலிஸ் சார்ஜன் ஒருவரும் கான்ஸ்டபிள் ஒருவருமே இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ஜாலிய சேனாரத்ன கூறினார்.

மருதானை பொலிஸ் பிரிவின், டாலி வீதி பகுதியில் நேற்று ஊரடங்கு அமுலில் இருந்த போது, ஊரடங்கு அனுமதிப்பத்திரம் இன்றி அந்த வீதியால் நடந்து சென்ற நால்வரை, இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிடித்து, தோப்புக்கரணம் போடவைத்து தண்டித்தனர். தனது கைகளால் இரு காதுகளையும் பிடித்துக்கொண்டு குனிந்து எழும் வகையில் இவ்வாறு அந்த நால்வரும் தண்டிக்கப்பட்ட காட்சிகள் ஊடகங்களில் ஒளிபரப்பாகின. இதனையடுத்து பொலிஸ் தலைமையகம் விஷேட விசாரணைகளை ஆரம்பித்தது.

இதன்போது குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் கொழும்பு நகர போக்குவரத்து பிரிவின் சார்ஜன் மற்றும் கான்ஸ்டபிள் அதிகாரிகள் என தெரியவந்துள்ளது. இதனையடுத்தே, கொழும்பு நகர போக்குவரத்து பிரிவு மற்றும் அவசர அழைப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் புஷ்பகுமாரவின் ஆலோசனைக்கு அமைய, அந்த பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகரினால் குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பணி இடை நிருத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் கட்டளைகளுக்கு அடி பணியாமை, பொலிஸாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் தற்போது பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள மேற்படி இருவருக்கும் எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related Posts