Ad Widget

தொல்லியல் திணைக்களம் இனவாத திணைக்களமாக தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகிறது – சுமந்திரன்

குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறியவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து நீதியை பாதுகாக்க முற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

தொல்லியல் திணைக்களம் இனவாத திணைக்களமாக தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபன திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்கூறுகையில்,

குருந்தூர் மலையில் எங்களுடைய கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.தொல்லியல் திணைக்களம் சட்டவிரோதமாக அங்கு கட்டிடங்களைக் கட்டுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

தொல்லியல் திணைக்களம் இப்படியாக எங்களுடைய மக்களின் நிலங்களை மிக மோசமான முறையிலே அபகரிக்கின்ற திட்டங்கள் சம்பந்தமாக பல தடவை பாராளுமன்றத்திலும் வெளியிலும் பேசியிருக்கின்றோம்.

600க்கு மேற்பட்ட ஏக்கர் வயல் காணிகளை அபகரிக்கின்ற இந்த முயற்சி தடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் செய்த ஆர்ப்பாட்டத்திற்கு பிரதிபலனாக அவர்கள் கைது செய்யப்படுகின்றார்கள் இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதியோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்திய சந்திப்பில் இது குறித்து பேசினோம். பணிப்பாளர் நாயகத்துக்கு தான் உடனடியாக அறிவிப்பதாக உறுதியளித்திருந்தார். ஆனாலும் இந்த தொல்லியல் திணைக்களம் மிக மோசமான இனவாத திணைக்களமாக,தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இதே போன்று கிழக்கில் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தை அபகரிக்க இப்போது ஒரு திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.. திருக்கோணேஸ்வரம் இலங்கையிலே இருக்கின்ற பஞ்சஈஸ்வரங்களில் ஒன்று. இது மிகப்பழமை வாய்ந்தது. இந்த நாட்டுக்கு விஜயன் வருவதற்கு முன்னதாகவே

பஞ்ச ஈஸ்வரங்கள் இலங்கையில் இருந்ததாக வரலாற்றுஆசிரியர் சேர் போல் பீரிஸ் சான்றுரைத்துள்ளார்.

தற்போது அரசிலுள்ள இரத்தினபுரியை சேர்ந்த ஒருவர் அங்கு வந்து மாவட்டக்காரர்களை அழைத்து சென்று ஆக்கிரமிப்புக்களில் ஈடுபடுகின்றார்.

திருக்கோணேஸ்வ்ர் ஆலயத்தை அண்டியுள்ள இடங்களில் 58 கடைகளை வேறு மாவட்டங்களை சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களே நடத்தி வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புக்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இதேவேளை அரசு ஜெனீவா விவகாரத்தில் 2012-2015 இல் ஒரு நிலைப்பாட்டையும் தற்போது ஒரு நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளது அரசின் இந்த இரட்டை நிலைப்பாடுகள் தவறானவை என்றார்.

Related Posts