Ad Widget

தொலைபேசி பழக்கத்தில் ஆண்களைச் சந்திக்கச் சென்ற பெண்களின் நிலை!!

யாழில் குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டார் எனக் கூறப்பட்ட பெண், நான்கு நாட்கள் கடந்த நிலையில் தன்னை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார்கள் என பருத்தித்துறைத் பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

யாழ். சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த இரு பெண்களுக்கும் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களுக்கும் இடையில் தொலைபேசியின் தவறிய அழைப்பு (மிஸ்ட் கோல்) மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சில நாட்கள் பழக்கத்தின் பின்னர் நால்வரும் சந்திப்பதற்கு விரும்பியுள்ளனர். அதடனடிப்படையில் கடந்த 8ஆம் திகதி சுன்னாகத்திலிருந்து பெண்கள் இருவரும் யாழ். நகருக்கு பஸ்ஸில் சென்று அங்கிருந்து கொடிகாமத்துக்குச் சென்றுள்ளனர். கொடிகாமம் பஸ் நிலையத்தில் இரு இளைஞர்களும் அவர்களுக்காகக் காத்திருந்து, தமது மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிக்கொண்டு கொடிகாமம் – பருத்தித்துறை வீதியூடாக வரணி மாசார் பகுதிக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் நான்கு பேரும் அங்கு இருந்தவேளை அப்பகுதிக்கு வந்த மேலும் சில இளைஞர்கள், இரு பெண்களிடமும் அத்துமீறி நடக்க முற்பட்டுள்ளனர். அவ்வேளை அங்கிருந்து ஒரு பெண் தப்பி ஓடி வீதிக்கு வந்து வீதியால் சென்றவர்களின் உதவியுடன் கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, இளைஞர்கள் குழு ஒன்று தம்மை கடத்தி செல்ல முற்பட்டது எனவும் , அவர்களிடமிருந்து தான் தப்பி ஓடி வந்துள்ளார் எனவும், தனது நண்பியையும் , நண்பர்களான இரு இளைஞர்களையும் காப்பற்றுமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த அதேவேளை, சம்பவம் இடம்பெற்றது பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியாக இருந்தமையால் , பருத்தித்துறைப் பொலிஸாருக்கு அறிவித்து இரண்டு பொலிஸ் பிரிவினரும் அன்று (8ஆம் திகதி) கடத்தப்பட்டார் எனக் கூறப்பட்ட பெண்ணையும் , பெண்களுடன் சென்ற இரு ஆண்களையும் தேடினார்கள்.

அதேவேளை, கடத்தப்பட்டார் எனக் கூறப்பட்ட பெண் அன்றைய தினம் மாலையே வீடு திரும்பியுள்ளார். அதனை அறிந்து கொண்ட பருத்தித்துறைப் பொலிஸார் அவரது வீட்டுக்குச் சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளமையால் வாக்கு மூலம் அளிக்க வருமாறு கேட்டனர். அதற்கு குறித்த பெண் நான்கு நாட்களாக மறுப்புத் தெரிவித்து வந்த நிலையில் நேற்று (11) பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்குச் சென்று வாக்கு மூலம் அளித்துள்ளார்.

குறித்த வாக்கு மூலத்தில்,

“தொலைபேசி ஊடாக ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில் , இரு இளைஞர்களையும் நானும் எனது நண்பியும் சந்திக்கச் சென்றோம். அப்போது அவர்கள் எம்மை வரணிப் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் தமது நண்பர்களை அழைத்து எம்முடன் தவறாக நடக்க முற்பட்டவேளையே நண்பி அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். என்னால் தப்பிச் செல்ல முடியவில்லை.

நாம் நம்பிச் சென்ற இளைஞர்களும் அவர்களின் நண்பர்களான ஏனைய இளைஞர்களுமாக மூன்று பேர் என்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர், அங்கிருந்து என்னை அழைத்து வந்து பஸ்ஸில் ஏற்றிவிட்டார்கள்” என வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை , அந்த இளைஞர்கள் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது எனவும், தொலைபேசி ஊடான பழக்கம் மாத்திரமே எனவும் தெரிவித்துள்ளார். அதனால் அவர்களின் தொலைபேசி இலக்கத்தைக் கொண்டு சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Posts