Ad Widget

தொடரை வென்றதால் 2-வது இடத்திற்கு முன்னேறிய நியூசிலாந்து

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.

ஏற்கனவே முடிவடைந்த இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் இருந்தது. நேற்றய போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை வென்று விடலாம் என்பதால் இரு அணிகளும் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தின.

குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இருந்தது. ஏனென்றால், மெக்கல்லம் இந்த போட்டியுடன் ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு பெற இருந்தார். இதனால் அவரை வெற்றி வாகையுடன் வழியனுப்ப நியூசிலாந்து வீரரர்கள் எண்ணினர்.

அதன்படியே நியூசிலாந்து வெற்றி பெற்று அவரை கம்பீரத்துடன் வழியனுப்பியது. அத்துடன் தொடரை 2-1 எனக் கைப்பற்றியதால் ஐ.சி.சி.யின் ஒருநாள் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2-வது இடத்தில் இருந்த இந்தியா 3-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.

ஆஸ்திரேலியா 126 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், நியூசிலாந்து 114 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இந்தியா 113 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது.

தென்ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, வங்காள தேசம், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் முறையே 4-வது இடத்தில் இருந்து 10-வது இடம் வரை பிடித்துள்ளது.

Related Posts