Ad Widget

தையிட்டியில் தொடரும் பொலிஸாரின் அடாவடி! மக்கள் விசனம்!!

தையிட்டியில் தனியார் காணியில் திஸ்ஸ விகாரை அமைத்ததற்கு எதிராக கடந்த (22.05.2023) ஆம் திகதியில் இருந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (23.05.2023) போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரதிநிதி, ஊடகவியலாளர் மற்றும் பொதுமக்கள் உட்பட ஒன்பதுபேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று (25.05.2023) அதிகாலை குறித்த பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை திறந்து வைக்கப்பட்டது. இருந்தும் மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதன்போது, போராட்டக்காரர்களையும், செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களையும் அங்கிருந்த, கான்ஸ்டபிள் தரமுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் காணொளி மற்றும் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் விதத்தில் செயற்பட்டுள்ளார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் இடம்பெறும்போது அருகே இருந்த பலாலி பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரி அதற்கு எவ்வித எதிர்ப்பினையும் வெளியிடாது அங்கு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அவதானித்த போராட்டக்காரர்கள் ”பொலிஸ் அராஜகம் ஒழிக”, ”கால் முறிப்பதுவும் தொலைபேசி களவெடுப்பதுவும் பொலிஸாரின் கடமையா”, ”கொலை குற்றச்சாட்டு மற்றும் 9 குற்றச்சாட்டுக்கள் உள்ளவருக்கு பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியா” என கோஷமிட்டனர்.

இதனையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் காணொளி எடுப்பதை நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரின் இவ்வாறான செயற்பாடுகள் ஜனநாயகத்துக்கு எதிராக அடக்குமுறைகளை எடுத்துக் காட்டுவதாக அங்கிருந்தவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், த.தே.ம.முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Posts