Ad Widget

தேர்தல் மறுசீரமைப்பால் கூட்டமைப்புக்கு பாதிப்பில்லை – சுமந்திரன்

‘அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான விவாதங்கள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இந்த தேர்தல் முறைமை மாற்றத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பிரச்சினை வராது. இருப்பினும், அடுத்தடுத்த கட்டங்களில் உள்ள சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படும். இதனாலேயே 20ஆவது திருத்தச்சட்டத்தை எதிர்க்கின்றோம்’ என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

மே மாதம் 20ஆம் திகதி யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை, நேற்று வெள்ளிக்கிழமை (26) யாழ். நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. இதில் ஆஜராகிய பின்னர் ஊடகவியலாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த சுமந்திரன் எம்.பி, ‘தற்போது உள்ளதை விட மேலும் ஜனநாயகம் மேம்படும் என்றால் இந்த தேர்தல் முறைமை மாற்றத்தை ஆதரிப்போம். ஆனால் இதன் மூலம் சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படும். வடக்கு – கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மை கட்சியாக இருப்பதால் இந்த தேர்தல் முறைமை மாற்றத்தால் பிரச்சினை ஏற்படாது’ என்றார்.

‘நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான ஒதுக்கீடு தொடர்பாக நான் எனது உரையில் கூறியிருக்கிறேன். நாடாளுமன்றில் 6 வீதம் கூட பெண்களுக்கான இடம் இல்லை. இந்த ஒதுக்கீடானது சட்டபிரகாரம் கொண்டுவரப்பட வேண்டும்.

ஆனாலும் மார்ச் மாதம் வெளியிட இருந்த ஐ.நா அறிக்கை செப்டெம்பர் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் அறிக்கை வெளிவரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்குள் பொதுத் தேர்தலை நடத்தவேண்டும் என அரசு எண்ணுகின்றது. ஆனால் செப்டெம்பர் மாதம் தேர்தல் இடம்பெற வாய்ப்பில்லை.

ஏனெனில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் தான் தேர்தல் நடாத்தமுடியும். இன்னும் நாடாளுமன்றம் கலைக்கப்படவில்லை. எனவே ஐ.நா அறிக்கை வெளிவருவதற்குள் தேர்தல் நடாத்துவதற்கு வாய்ப்பில்லை’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts