Ad Widget

தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி பிரகடனம் வெளியீடு

mahinda_rajapaksaவட மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணையாளருக்கு பிரகடனம் வெளியிட்டுள்ளார்.

ஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, இலங்கை – இந்திய ஒப்பந்தம் 1987 அக்டோபர் 29இல் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் இலங்கை அரசு அதன் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாகும்.

இதன்படி 1987 நவம்பர் 14இல் இலங்கை பாராளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது. 1988 பெப்ரவரி 3 ஆம் திகதி ஒன்பது மாகாணசபைகள் உருவாகக்ப்பட்டன.

மாகாண சபைகளுக்கான முதலாவது தேர்தல்கள் 1988 ஏப்ரல் 28ஆம் திகதி வடமத்திய, வடமேல், சபரகமுவா, மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களுக்கு இடம்பெற்றன. 1988 சூன் 2 இல் மத்திய, தெற்கு, மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன. அன்று இலங்கையின் ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஏழு மாகாண சபைகளினதும் ஆட்சியைக் கைப்பற்றியது.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவர இணக்கம் காணப்பட்டது. இவ்விணைப்பு நிரந்தர இணைப்பாக இருப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் 1988 டிசம்பர் 31 இற்குள் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஆனாலும், இந்த பொது வாக்கெடுப்பை ஒத்திவைக்க இலங்கை அரசுத்தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. 1988 செப்டம்பர் 2 இல் அரசுத் தலைவர் ஜே. ஆர். ஜயவர்தன இரு மாகாணங்களையும் இணைத்து வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற ஒரு மாகாணசபையாக நிருவகிக்க உத்தரவு பிறப்பித்தார்.

இந்த இணைந்த மாகாணசபைக்கான தேர்தல் 1988 நவம்பர் 19 இல் நடத்தப்பட்டது. இந்தியாவின் ஆதரவில் இயங்கிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இத்தேர்தலில் வெற்றி பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் பங்கேற்கவில்லை.

1993 ஆம் ஆண்டில் வட-கிழக்குத் தவிர்ந்த ஏழு மாகாணங்களுக்கு 2வது தேர்தல்கள் இடம்பெற்றன. ஆறு மாகாணங்களில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. மேற்கு மாகாணசபையை முக்கிய எதிர்க்கட்சிக் கூட்டணியான மக்கள் கூட்டணி கைப்பற்றியது.

தெற்கு மாகாணத்தில் ஐதேகவின் சில உறுப்பினர்கள் கட்சி மாறியதை அடுத்து அங்கு 1994 ஆம் ஆண்டில் சிறப்புத் தேர்தல் நடத்தப்பட்டது. மக்கள் கூட்டணி வெற்றி பெற்றது.

3வது மாகாணசபைத் தேர்தல்கள் 1999 இல் வடகிழக்குத் தவிர்ந்த 7 மாகாணங்களுக்கு நடத்தப்பட்டன. ஆளும் மக்கள் கூட்டணி வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணசபைகளைக் கைப்பற்றியது. ஏனைய மாகாணங்களில் சிறிய கட்சிகளின் துணையுடன் ஆட்சியமைத்தது.

2002ஆம் ஆண்டில் மத்திய மாகாண சபையின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்கள் கூட்டணிக்கான ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து ஐதேக அங்கு ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது.

4வது மாகாணசபைத் தேர்தல்கள் ஏழு மாகாணங்களுக்கு 2004 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டன. இலங்கையின் ஆளும் கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அனைத்து சபைகளையும் கைப்பற்றியது.

வடக்கு மாகாணம் தவிர்ந்த எட்டு மாகாணங்களுக்கு 5வது மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அனைத்து சபைகளையும் கைப்பற்றியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தல்களில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts