Ad Widget

தேர்தலில் சுமந்திரன் போன்றவர்களை நிராகரிக்கவேண்டும் அனந்தி கோரிக்கை

சர்வதேசஅரங்கில் நேர்மையில்லாமல் செயல்படும், இரண்டு நாக்குப் போக்குள்ளவர்களை பாராளுமன்ற அரசியலில் இருந்து ஓரம்கட்டும் பொறுப்புவாக்காளர்களாகிய உங்களுக்குஉண்டுஎன்பதையே இந்தத் தேர்தலுக்கான இறுதியும் உறுதியுமான எனது செய்தி. என வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஊடக அறிக்கை மூலம் கோரியுள்ளார் அவரது அறிக்கையின் முழு வடிவம்

2013 வடமாகாண மக்கள் என்னை மாகாணசபைக்கு அமோகமான வாக்குகள் மூலம் தெரிந்தெடுத்தார்கள்.

நீண்ட நெடிய போரில் என்னைப்போல இழப்புகளுக்கு முகம்கொடுத்த உறவுகளுக்காக எனது தெரிவைப்பயன்படுத்திக் குரல் கொடுப்பேன் என்ற வாக்கை நான் மக்களுக்கு முற்கூட்டியே வழங்கியிருந்தேன். அது மட்டுமல்ல, எனது கணவரான எழிலன் தனது தேசிய அரசியல் கடமையை எவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் செய்தார் என்பதையும் எமது மக்கள் அறிந்திருந்தார்கள்.

மாவிலாறில் போரை சிறிலங்கா அரசு பெரும் எடுப்புடன்ஆரம்பிக்கும் இறுதிக் கணம்வரை சர்வதேச போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்களுடன் எழிலன் எவ்வாறு ஒத்துழைத்து அந்தப் போரை தடுக்க முயன்றார் என்பதற்கு போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராக இறுதியாக இருந்த சுவீடன் நாட்டைச்சேர்ந்த உல்(f)ப்ஹென்றிக்சன் போன்றவர்களே நேரடிச்சாட்சியம்.

போரின் போக்கை ஒரு இனஅழிப்புப்போராக சிறிலங்கா அரசு மாற்றியதற்கும், அந்தப் போரின் முடிவின் இறுதிக்கணங்களில் கூட காயமடைந்தவர்களைப் பராமரித்துக்கொண்டிருந்த எனது கணவர் எவ்வாறு நடந்து கொண்டார், அவருக்குநடந்ததுஎன்ன, எம்மைச் சுற்றியிருந்த மக்களுக்கு நடந்தது என்ன என்பதற்கு நான் ஒரு சாட்சியமாக எனது தேசமக்களுக்கு எனது கடமையைச் செய்வது என்ற நோக்கத்தோடு இனஅழிப்புக்கெதிரான விசாரணையைச் சர்வதேசம் மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை ஐ.நா. மனிதஉரிமைச்சபையில் முன்வைத்தேன்.

உண்மையில், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பாகவும், வடமாகாணசபை சார்பாகவும் முதன்முதலில் ஐ.நா.மனித உரிமை சபையில் நேரடியாக இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையை நான் கோரும் வரை வேறுஎந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைச்சார்ந்த பாராளுமன்ற உறுப்பினரோ, மாகாணசபை உறுப்பினரோ அங்கு கலந்துகொண்டு அதைக் கோரியிருக்கவில்லை.

என்னைக்கூட இனஅழிப்புக்கான சர்வதேசவிசாரணையைக்கோரக்கூடாது என்று திரு.சுமந்திரன் அவர்கள் தடுத்தார் என்பதை கடந்த வருடமே நான் ஊடகங்களுக்கு அம்பலப்படுத்தியிருந்தேன்.

இனஅழிப்புப்போரின் தாக்கத்தை நேரடியாகத்தரிசித்தவள் என்ற வகையில் என்னோடு சர்வதேச பிரநிதிகள் பலரும் நேரடியாக மனம்திறந்துபேசும் வாய்ப்புக்கள் உருவாகின.

ஜெனிவாவில் சர்வதேசநாடுகளின் பிரதிநிதிகளைச்சந்தித்தபோது என்னிடம் ஒருநாட்டின் பிரதிநிதி திரு.சுமந்திரன் அவர்கள்இனஅழிப்புக்கெதிரான சர்வதேச விசாரணையை சர்வதேசநாடுகளின் பிரதிநிதிகளிடம் நேரடியாக ஏன் வலியுறுத்தவில்லை என்று கவலையுடன்தெரிவித்திருந்தார்.

உங்களைப்போல ஏன் ஏனைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நேரடியாககலந்துகொண்டு இனஅழிப்பு விசாரணையை வலியுறுத்தத் தவறுகிறார்கள் என்றும் என்னிடம்அவர்கள்கேட்டார்கள்.

மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்றஉறுப்பினருமான சிவாஜிலிங்கம் அண்ணையும் ஜெனிவாவில் இதேவிதமான கோரிக்கையை நேரடியாககலந்துகொண்டு முன்வைத்தார்.

உண்மையில், மாகாணசபையில் இனஅழிப்பு குறித்த சர்வதேசவிசாரணையை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டதீர்மானத்திற்கு அடிகோலுபவர்களாக சிவாஜிஅண்ணையையும் என்னையும்போன்ற சிலஉறுப்பினர்கள் தொடர்ச்சியாக உழைத்தோம். எமது உழைப்பிற்கு மேலாக எதிர்பாராத பலனாக முதலமைச்சர் மாண்புமிகுவிக்கினேஸ்வரன்அவர்கள் இந்த வருடத்தின்ஆரம்பதத்தில் நிறைவேற்றிய தீர்மானம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், சர்வதேசசக்திகளுக்கு நாம் தெளிவாக அந்த விடயத்தை எடுத்துச்சொல்லிவிட்டோம்.

ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல்விஞ்ஞாபனத்தில் இனஅழிப்புக்கு எதிரானசர்வதேச விசாரணைகோரப்படவில்லை. இது ஒருஅப்பட்டமான அநீதிஎன்பதை எமதுமக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

முதலமைச்சர் போரின் சாட்சியங்களுக்கூடாக, மக்களின் அபிலாசைகளை விளங்கிய நிலையில் தழுவியஒருதீர்மானத்தை, வடமாகாணசபை ஏகமனதாக வாக்களித்து நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தை தனது விஞ்ஞாபனத்தில் சேர்த்துக்கொள்ளாமல் விடப்பட்டிருப்பதன் பின்னணியை எமது மக்கள் தெளிவாகப்புரிந்து கொள்ளவேண்டும்.

எமது மக்கள் ஒன்றைத்தெளிவாகப்புரிந்து கொள்ளவேண்டும். இன்று சர்வதேச சக்திகளிடையேயும் குழப்பமானநிலை இருக்கிறது. ஐ.நா.சபைக்கு உள்ளேயே அதன்செயலாளர் பங்கி மூனின் அலுவலகத்துக்கு உள்ளே இருந்து கொண்டே சில சக்திகள் இனஅழிப்புக்கான சர்வதேசவிசாரணை என்ற எமது கோரிக்கையை முடக்கி ஒரு உள்ளக விசாரணையை இலங்கைக்கு உள்ளேயே நடாத்திவிடவேண்டும் என்று திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியான இன்றைய சூழலில் எமது குரலாக, எமது கோரிக்கையாக எது ஒலிக்க வேண்டும், யார் தெரிவாக வேண்டும் என்பது முக்கியமாகிறது.

அதேபோல எமக்குள் இருந்து எந்தக்குரல், எந்தக் கோரிக்கை ஒலிக்கக்கூடாது என்பதும் முக்கியமாகிறது.

இந்தத்தேர்தல்விஞ்ஞாபனத்தில் இன அழிப்புக்கான சர்வதேசவிசாரணையைக் கோராது தவிர்த்தவர்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குள் யார் என்பது உங்களுக்கு நன்றாகத்தெரியும். அவர்களுக்கு உங்கள் விருப்புவாக்குகளைச் செலுத்த வேண்டாம். அவர்களை உள்ளிருந்தே தோற்கடிக்க யாருக்கு முடியுமோ அவர்களுக்கு உங்கள் விருப்பு வாக்குகளைத் தவறாது செலுத்துங்கள்.

வேறு வகைகளில் குழப்பமானாவர்களாக நீங்கள் சிலரைக் கருதினாலும், இனஅழிப்புக்கான சர்வதேச விசாரணையைத் தான் கோருவதாகவும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல்விஞ்ஞாபனத்தில் இந்தக் கோரிக்கை தவிர்க்கப்பட்டதை தான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் முதலமைச்சரின் கைகளைப் பலப்படுத்துவதே காலத்தின் கட்டாயம் என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் தெளிவாக யார் உரைக்கிறார்களோ அவர்களுக்கு உங்கள் விருப்புவாக்கைத் தயவு செயது செலுத்துமாறு கூட்டமைப்புக்கே எமது வாக்கு என்று தீர்மானித்திருக்கும் அனைவரையும் நான் தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

இனஅழிப்பில் ஆகுதியாக்காப்பட்ட எமதுஆன்மாக்களின் குரலாக நான் இதை வேண்டுகிறேன்.

முதலமைச்சர் அவர்கள் கூட, நடுநிலைநின்று, ஆனால் பூடகமாக யாரை நீங்கள் தெரிவு செய்ய வேண்டும், யாரை நிராகரிக்க வேண்டும் என்று தனது நிலைப்பாட்டைக் கூறியிருக்கிறார். நான் அதைக் கொஞ்சம் விளக்கமாகவே இப்போது சொல்லியிருக்கிறேன்.

இலங்கைப் பாராளுமன்றின் கதிரைகளை யார் நிரப்பினாலும் பரவாயில்லை ஆனால், தற்போதைய சூழலில் சர்வதேச விசாரணையை சில சிக்கலான சக்திகளுடன் சேர்ந்து ஒத்துழைத்து குழி தோன்றிப் புதைப்பவர்களை மக்கள் ஆணை பெற்றவர்களாகத் தயவுசெய்து தேர்ந்தெடுக்க வேண்டாம்.

இறுதியாக நான் ஒரு விடயத்தைக் குறிப்பிடவிரும்புகிறேன்.

நான் பாராளுமன்றத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு உள்ளிருந்தவாறே பங்குபற்றவிரும்பினேன். இதற்கான காரணம் இனஅழிப்புக்கான சர்வதேச விசாரணையை மேலும் பலப்படுத்துவதற்காகச் செயற்படவேண்டும் என்ற ஒரு நோக்கத்துக்காகவே.

பலஇன்னல்களையும் சவால்களையும்சந்தித்து இனஅழிப்புப்போருக்குஊடாக தமது வாழ்வைத்தொடரும் எமது உறவுகளுக்குதன்மானத்துடனான, நீதியானவாழ்வையும் உரிமையையும்பெற்று;க்கொடுப்பதற்கு தொடர்ந்தும் உழைக்கவேண்டும் என்பதும்எனதுநோக்கமாகஇருந்தது.

எனது குரலுக்குச் செவி சாய்க்கும் நட்பு உள்ளங்களை சர்வதேசப்பரப்பில் எனது கடந்த இரண்டு வருடஅரசியல் வாழ்வில் நான்கண்டது எனது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.

நான் பலபாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டவாறு தான் மாகாணசபை உறுப்பினராக இருந்தவாறு எனது அரசியல்பணியை மேற்கொண்டிருக்கிறேன் .பாராளுமன்ற உறுப்பினர் ஆகினால் அது எனது பாதுகாப்புக்கு மேலும் சாதகமாக அமையும் என்றும் நான் நினைத்திருந்தேன்.ஆனால், இந்தவாய்ப்பு முழுமையாக நிராகரிக்கப்பட்டது. அதற்கு எடுக்கப்பட்ட ஒவ்வொரு முயற்சியும் முறியடிக்கப்பட்டது.

நான் எனது கட்சியைவிட்டும், கூட்டமைப்பை விட்டும் வேறு அணியில் சார்வதற்கோ, சுயேட்சையாக நிற்பதற்கோ ஒருதுளியும் திட்டமிட்டு இருக்கவில்லை.

சுயேட்சையாக நிற்பது போன்ற ஒரு அழுத்தத்தையும் நான் பிரயோகித்துப் பார்த்தேன்.ஆனால், அந்த அழுத்தமும் பலனளிக்க வில்லை.என்னில் நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள் இதைஅ றிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இதைநான் இங்கு சொல்கிறேன்.

தற்போது இருக்கும் சூழலில், இனஅழிப்புத் தீர்மானத்தை சரியாக நிறை வேற்றிய மாகாணசபையும் அதன் முதலமைச்சரும் தமிழ் மக்களின் அபிலாசைகளைக்காக குரல்கொடுக்கும் தார்மீகத்தைக் கொண்டிருப்பதால் அந்தக்கட்டமைப்புக்குள் இருந்தவாறே தொடர்ந்தும் நாங்கள் செல்ல வேண்டிய திசையைத் தீர்மானிப்போம்.

ஆனால், சர்வதேச அரங்கில் நேர்மையில்லாமல் செயல்படும், இரண்டு நாக்குப் போக்குள்ளவர்களை பாராளுமன்ற அரசியலில் இருந்து ஓரம் கட்டும் பொறுப்பு வாக்காளர்களாகிய உங்களுக்கு உண்டு என்பதையே இந்தத் தேர்தலுக்கான இறுதியும் உறுதியுமான எனது செய்தி.

மிகுதி மக்களான உங்கள்கைகளில் உள்ளது. இவ்வாறு அவரது அறிக்ககையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts