Ad Widget

தேசிய கீதத்தை தமிழில் பாட ஊக்குவிப்போம் உண்மையான நல்லிணக்கமே இலக்கு – பிரதமர் ரணில் உறுதி

தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவது ஊக்குவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ranil

நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தென்னாபிரிக்கா போன்று உண்மையை கண்டறிய விசேட குழு அமைக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த அடுத்த கட்டம் நோக்கிச் செல்ல வேண்டியுள்ளதாகவும் அதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் தேசிய ஐக்கிய தலைமையகம் ஒன்று அமைக்கப்படும் என்றும் இத்திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலில் நிறைவேற்றப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணை பிரேரணை மற்றும் அதனை கொண்டுவந்த நாடுகள், புலம்பெயர் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

பான் கீ மூனுடன் கடந்த அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தம் உள்ளிட்ட சில விடயங்களே ஐ,நா மனித உரிமை கவுன்ஸிலில் பிரேரணை முன்வைக்க காரணமாக அமைந்தது என்றும் ஆனால் நல்லிணக்க விடயங்களில் சர்வதேசத்திடம் சரணடையத் தேவையில்லை என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை என்றும் பாதுகாப்பு உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அது குறித்து எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்த பிரதமர், பழைய முறைபோன்று அல்லாது பயங்கரவாதம் இன்று உலகில் புதிய சொரூபங்களில் வருவதாகவும் அதுகுறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்படுவதில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளதாகவும் ஆனால் பிரதான ஊழல் மோசடிகாரர்களை பிடிக்க சட்டதிட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது என்றும் பிரதமர் கூறினார்.

19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள மக்கள் தீர்ப்பு ஒன்றை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட மாட்டதெனவும் அனைத்தும் சட்ட ஆலோசனைபடி பாராளுமன்றில் நிறைவேற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார். ஆனால் நீதிமன்றம் பரிந்துரை செய்யும் திருத்தங்களை மேற்கொள்ளத் தயார் என்றும் ரணில் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைகளின் பதவிகாலம் முடிவுறவுள்ள நிலையில் அதன் காலம் நீடிக்கப்படுமா அல்லது ஆணையாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுமா என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த பிரதமர், ஜனாதிபதி சீனா சென்றுள்ளதாகவும் அவர் நாடு திரும்பியதும் அது குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்றும் கூறினார்.

இதேவேளை, சீனாவின் துறைமுக நகர் திட்டம் குறித்த விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் உள்ள விடயங்களுக்கு ஏற்ப எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்து சமுத்திரத்தின் மத்தியில் இலங்கை அமைந்துள்ளதால் உலகிற்கே இலங்கை முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts